புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளின் ஆட்டத்தின் போது ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மோசமாக இருந்ததாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலையை விட்டுக் கொடுத்தது. இதன்பின் எந்த அணியாலும் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற முடியவில்லை.

தற்போது நியூசிலாந்து அணி அந்த சாதனையை படைத்துள்ளது. பெங்களூர் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து, புனே டெஸ்ட் போட்டியிலும் 103 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறது. 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் நியூசிலாந்து அணியின் முன்னிலை 301 ரன்களாக இருப்பதால், இந்திய அணி புதிய வரலாறு படைத்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும்.
இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகளை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்திருக்கிறார். அவர் பேசுகையில், நியூசிலாந்து அணியிடம் 100 ரன்கள் முன்னிலையை விட்டுக் கொடுத்துள்ளோம். அப்படியென்றால், நியூசிலாந்து அணியை 2வது இன்னிங்ஸில் 120 ரன்களில் ஆல் அவுட் செய்யணும் என்று களமிறங்க வேண்டும்.
நியூசிலாந்து அணியை விரைவாக ஆல் அவுட் செய்வதற்கு, அட்டாக்கிங் ஃபீல்ட் செட்டை அமைக்க வேண்டும். விக்கெட்டை எப்படி கைப்பற்றலாம் என்று சிந்திக்க வேண்டும். அப்போதும் எதிரணியால் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுக்க முடிந்தால், வியூகத்தை கொஞ்சம் மாற்றி அமைக்கலாம். ஆனால் ரோஹித் சர்மா தொடக்கம் முதலே டிஃபென்சி மனநிலையுடன் தான் இருந்தார்.
விக்கெட்டை வீழ்த்த வேண்டும், ஃபீல்டிங்கையும் கொஞ்சம் பரவலாக நிறுத்தி ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், எளிதாக ஆல் அவுட் செய்ய முடியாது. அது பவுலர்களுக்கும் பின்னடைவை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். 2வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி எளிதாக 1, 2 ரன்களை எடுக்க முடிந்தது. இதற்கு பவுண்டரியை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அணி ஃபீல்டர்களை கொஞ்சம் தள்ளி நிறுத்தியதும் காரணம்.
இதனால் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் ரன்கள் குவித்த போது, ரோஹித் சர்மாவும் சுதாரிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரை நம்பி மட்டுமே ரோஹித் சர்மா களத்தில் செயல்பட்டார். இதனை 3வது நாளிலாவது மாற்றிக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.