தர்மசாலா: நியூசிலாந்து அணியில் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் களமிறங்க வாய்ப்புள்ளதால், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தர்மசாலா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த இரு அணிகளுமே உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை என்பதால், ரசிகர்களிடையே போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்திய அணிக்கு இணையான சமபலம் வாய்ந்த அணி என்பதோடு மட்டுமல்லாமல், நியூசிலாந்து அணி வீரர்களுக்கு இந்திய ஆடுகளத்தை நன்றாக புரிந்து கொண்டவர்கள் என்று சொல்ல வேண்டும்.

கான்வே, லேதம், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, சான்ட்னர் மற்றும் மார்க் சேப்மேன் உள்ளிட்ட வீரர்கள் இந்திய ஆடுகளங்களுக்கு நன்றாக பழக்கப்படுத்தி கொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் போல்ட், டிம் சவுதி, இஷ் சோதி, ஃபெர்குசன் உள்ளிட்டோரும் ஐபிஎல் தொடரில் ஆடுவதால், அனைத்து மைதானங்களின் தன்மையும் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். இதனால் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறந்த ஆட்டத்தை நியூசிலாந்து அணி வெளிப்படுத்தி வருகிறது.
இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ஏனென்றால் நியூசிலாந்து அணியில் கான்வே, லேதம், ரச்சின், மார்க் சேப்மேன் மற்றும் சான்ட்னர் உள்ளிட்ட 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இடதுகை பேட்ஸ்மேன்கள் பலரும் ஆஃப் ஸ்பின்னர்களிடம் திணறுவது வழக்கமானது. அதேபோல் இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதில் அஸ்வின் கைதேர்ந்தவர்.
ஆனால் அஸ்வினை தேர்வு செய்வதில் இந்திய அணிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளதால், அவரது இடத்தில் அஸ்வினை தேர்வு செய்ய முடியாது. அப்படி தேர்வு செய்யும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் நம்பர் 7 வரிசையுடன் முடிவடையும். அதேபோல் ஷர்துல் தாக்கூரை 3வது வேகப்பந்துவீச்சாளராக களமிறக்கினால், அவரால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. இதனால் ரோகித் சர்மா என்ன முடிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.