ரோஹித் சர்மாவை நீக்கியது பெரிய தப்பு.. சுப்மன் கில் பாவம் அவசரப்பட்டுட்டீங்க.. முகமது கைஃப் விளாசல்
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது கிரிக்கெட் வட்டத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதுதான் இந்த சறுக்கலுக்குக் காரணம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் இந்திய அணி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், ரோஹித் சர்மாவை அவசரகதியில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது தவறான முடிவு என்று சுட்டிக்காட்டினார். "ரோஹித் சர்மா தலைமையில் நாம் விளையாடும்போது, ஒரு வலுவான அணியை அவர் கட்டமைத்து வைத்திருந்தார். இருதரப்புத் தொடர்களில் அவர் எப்போதும் ஆதிக்கம் செலுத்துவார். சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று கொடுத்த பிறகும், அவரை மாற்றியது ஏன்? அவருக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்திருக்க வேண்டும். அவரை மாற்றியது புத்திசாலித்தனமான செயல் அல்ல" என்று கைஃப் கூறினார்.

மேலும் பேசிய அவர், "இப்போது இருக்கும் நிர்வாகம் புதிய அணியை உருவாக்கியதற்கான பெயரையும் புகழையும் பெற விரும்பியது. அதனால்தான் கில்லை கேப்டனாக்கினார்கள். ஆனால் நடந்தது என்ன? கேன் வில்லியம்சன் போன்ற ஜாம்பவான் கேப்டன்களால் செய்ய முடியாததை, பிரேஸ்வெல் தலைமையிலான இந்த நியூசிலாந்து அணி செய்துவிட்டுச் சென்றுவிட்டது. இந்திய மண்ணில் முதன்முறையாகத் தொடரை வென்று வரலாறு படைத்துவிட்டார்கள்" என்று வேதனையோடு தெரிவித்தார்.
சுப்மன் கில்லுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு அவரது ஆட்டத்தையே பாதிப்பதாகக் கைஃப் கவலை தெரிவித்தார். "சுப்மன் கில் மீது அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றிவிட்டார்கள். இந்த அழுத்தத்தைத் தாங்கும் பக்குவம் அவருக்கு இன்னும் வரவில்லை. டி20 அணியில் கூட அவர் இல்லை. ஒரு பக்கம் அணியிலிருந்து நீக்கம், மறுபக்கம் கேப்டன்சி அழுத்தம் என அவர் திக்குமுக்காடுகிறார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையையே பாதிக்கும் செயல்" என்று எச்சரித்துள்ளார்.
இந்தத் தொடரில் கில் ஒரு அரைசதம் அடித்திருந்தாலும், அவரிடம் முன்பு இருந்த அந்தத் துள்ளலும், இயல்பான ஆட்டமும் இப்போது இல்லை என்றும், அவரை அணி நிர்வாகம் அவசரப்படுத்திவிட்டதாகவும் முகமது கைஃப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications