மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் கேப்டன் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் ஆறு இன்னிங்ஸில் சேர்த்து மொத்தமாக 100 எண்கள் கூட அடிக்காதது தான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சூழலில் இதற்கு முன்பு நடந்த வங்கதேச தொடரிலே கேப்டன் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. விராட் கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 99 ரன்கள் தான் சேர்த்தார்.

இதில் அதிகபட்ச ஸ்கோர் 47 ரன்கள் ஆகும். கேப்டன் ரோகித் சர்மா அதைவிட மோசம். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 42 ரன்கள் தான் அடித்தார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 23 ரன்கள் ஆகும். வங்கதேச தொடரிலே இந்த வீரர்களும் சுழற் பந்துவீச்சுக்கு தடுமாறுவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த தருணத்தில் வங்கதேச தொடர் செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைந்து விட்டது .நியூசிலாந்துக்கு எதிரான தொடர் அக்டோபர் 16ஆம் தேதி தான் தொடங்கியது. கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்கு மேல் ரோகித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் ஓய்வு கிடைத்தது. இந்த ஓய்வை பயன்படுத்தி இருவரும் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்வதில் பயிற்சி எடுத்து இருக்கலாம்.
தங்களது பேட்டிங்கில் உள்ள குறைகளை பயிற்சி எடுத்து சரி செய்திருக்கலாம். அதுவும் இல்லை என்றால் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் ஏதேனும் விளையாடி இருக்கலாம். ஆனால் இருவரும் வங்கதேச தொடர் முடிவடைந்த உடனே வெளிநாட்டுக்கு சென்று விட்டார்கள். ரோகித் சர்மா அபுதாபிக்கு சென்று தனது குடும்பத்தினருடன் எம்பிஏ போட்டிகளை கண்டு களித்தார்.
விராட் கோலி விட்டால் போதும் என லண்டனுக்கு ஓடிவிட்டார். நியூசிலாந்து அணி தானே என்ற தலைகனத்துடன் இந்திய வீரர்கள் இருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி இருக்கும் ரசிகர்கள் இந்திய அணிக்காக விளையாட பயிற்சி எடுக்க முடியவில்லை என்றால் எதற்காக இன்னும் ஓய்வு பெறாமல் விளையாடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.