புனே: இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட வீரர்களில் சொந்த மண்ணில் அதிக தோல்விகளை சந்தித்த மோசமான கேப்டன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் ரோஹித் சர்மா. சொந்த மண்ணில் 14 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள ரோஹித் சர்மா, 4 போட்டிகளில் தோல்வியை பெற்றுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இதன் மூலமாக 2-0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. அதேபோல் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்திருக்கிறது.

4,331 நாட்களுக்கு பின் சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்திருப்பதால், ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் கடந்த 2 போட்டிகளிலும் மோசமாக கேப்டன்சி செய்த ரோஹித் சர்மாவை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதனிடையே கேப்டன் ரோஹித் சர்மா இந்த தோல்வியின் மூலமாக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இதுவரை சொந்த மண்ணில் இந்திய அணியின் கேப்டனாக 15 போட்டிகளில் தலைமை ஏற்றுள்ள ரோஹித் சர்மா, 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார். இந்த நூற்றாண்டில் சொந்த மண்ணில் அதிக தோல்வியை அடைந்த இந்திய கேப்டன்களில் ரோஹித் சர்மாவின் பெயர் தான் முதல் இடத்தில் இருக்கிறது. இவருக்கு பின் சவுரவ் கங்குலி 21 போட்டிகளில் தலைமையேற்று 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார்.
தொடர்ந்து தோனி 30 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 3 போட்டிகளிலும், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் தலா 2 தோல்விகளுடனும் இருக்கின்றனர். அதேபோல் விராட் கோலி 31 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை அடைந்துள்ளார். இதனால் விராட் கோலியை மீண்டும் கேப்டனாக்க வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
மேலும் கடந்த நூற்றாண்டில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ் மற்றும் முகமது அசாருதீன் தலா 20 போட்டிகளில் தலைமையேற்று 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் மன்சூர் அலிகான் படோடி 27 போட்டிகளில் பொறுப்பேற்று 9 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார். இதனால் ரோஹித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.