தொடரில் வெற்றி
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த நான்கு போட்டிகளில் வெற்றி பெறாத நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் இந்தப் போட்டி நடைபெற்றது.
ரோஹித் சர்மா கேப்டன்
இந்தப் போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சனுக்கு துவக்கம் அளிக்க வாய்ப்பு அளித்து, மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார்.
ரோஹித் சர்மா அரைசதம்
ராகுல் 45, சாம்சன் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ரோஹித் சர்மா சிறப்பாக ஆடினார். இரண்டு சிக்ஸர்கள், மூன்று ஃபோர் அடித்து 35 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரோஹித். இது அவரது 21வது சர்வதேச டி20 போட்டி அரைசதம் ஆகும்.
உலக சாதனை
இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 21 அரைசதம் மற்றும் 4 சதம் அடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா. இதன் மூலம், டி20யில் அதிக முறை ஐம்பது ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார் ரோஹித் சர்மா.
முதல் இடம்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி20 போட்டிகளில் 24 முறை ஐம்பது ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்து இருக்கும் நிலையில், அந்த சாதனையை முந்தி இந்தப் பட்டியலில் முதல் இடத்தை தனியாக கைப்பற்றி இருக்கிறார் ரோஹித் சர்மா.
அடுத்த இடங்களில் யார்?
நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் மற்றும் அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங் இருவரும் 17 முறையும், டேவிட் வார்னர் 16 முறையும் ஐம்பது ரன்களுக்கும் அதிகமாக ரன் குவித்து அதே பட்டியலில் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் உள்ளனர்.
ரோஹித் காயம்
ரோஹித் சர்மா தன் அரைசதம் மூலம் இந்த இமாலய சாதனையை செய்த நிலையில், அடுத்த சில பந்துகளில் காலில் பலத்த காயம் அடைந்தார். பின் வலியுடன் மீண்டும் பேட்டிங் செய்த அவர் ஒரு சிக்ஸ் அடித்தார். பின், தன்னால் ரன் ஓட முடியாது என்ற நிலையில், ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
60 ரன்கள்
ரோஹித் சர்மா தான் இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக ரன் குவித்தார். 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இருந்தார் அவர். 3 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார். ராகுல் 45, ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் எடுத்தனர்.
தற்காலிக கேப்டன்
ரோஹித் சர்மா காயம் அடைந்த நிலையில், அவரால் பீல்டிங் செய்ய வர முடியவில்லை, அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஒரு கட்டத்தில் தோல்விக்கு அருகே இருந்த இந்திய அணி பின் பந்துவீச்சாளர்களின் எழுச்சியால் வெற்றி பெற்றது.
இந்தியா வெற்றி
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 163 ரன்கள் குவித்தது. இது இந்த மைதானத்தில் குறைவான ரன்கள் என்ற போதிலும், சிறப்பான பந்து வீச்சால் மட்டுமே இந்திய அணி இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.