மும்பை: வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரின் 10 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 133 ரன்கள் மட்டுமே சேர்த்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விரைவில் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைவதற்கு பேட்ஸ்மேன்கள் காரணமாக இருந்தாலும், கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் மோசமாக அமைந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸில் தொடங்கி, பவுலிங் மாற்றம், பிளேயிங் லெவனில் நடந்த மாற்றம், பிட்சை சரியாக கணிக்காதது, டாஸை இழந்தது, டிஃபென்சிவ் மனநிலையில் விளையாடியது என்று பல்வேறு சொதப்பல் நடந்தது.
பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் ரோஹித் சர்மா கேப்டனாகவும் தோல்வியை சந்தித்துள்ளார். 6 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா வெறும் 91 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். ஏற்கனவே வங்கதேச டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மாவின் ஆட்டம் விமர்சனத்தை சந்தித்தது. மொத்தமாக 5 டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா வெறும் 133 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா முழுக்க முழுக்க டி20 மனநிலையில் அட்டாக் செய்வதே அவரின் பேட்டிங் சொதப்பல்களுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. ஸ்பின்னர்களை விளாச முடியும் என்றாலும், அவர் தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்களின் 4வது ஸ்டம்ப் லைனில் வரும் பந்தில் ஆட்டமிழப்பது தொடர் கதையாகி வருகிறது.
டிம் சவுதி, மேட் ஹென்றி, ஓரூர்க் என்று அத்தனை நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களும் ரோஹித் சர்மாவுக்கு அதே லைனில் தான் பவுலிங் செய்தனர். அவரும் அதே பந்தில் ஆட்டமிழப்பதை வாடிக்கையாக மாற்றி கொண்டுள்ளார். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்யாமல் டிஃபென்ஸ் ஆடுவதிலும் ரோஹித் சர்மாவுக்கு நம்பிக்கை இல்லாததும் புரிந்து கொள்ள முடிகிறது.
38 வயதை நெருங்கிவிட்ட ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மை இழப்பது வழக்கமான பிரச்சனை தான். ஆனால் பிடிவாதமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாடுவது தான் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரோஹித் சர்மா விரைவில் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.