புனே : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பது ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் எஞ்சி இருக்கும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற வேண்டும்.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 400 ரன்கள் அடித்தது.

ஆனால் தற்போது இந்திய அணி புனே டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசி நியூசிலாந்து அணியை 259 ரன்களில் சுருட்டி இருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளும் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 அல்லது 500 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறும் சூழல் ஏற்படும்.
ஏனென்றால் புனே டெஸ்ட் போட்டியில் கடைசியில் களமிறங்கி ரன் குவிப்பது என்பது சவாலான காரியமாக இருக்கும். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க வேண்டும் என்றால் கேப்டன் ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். இதனால் ரோஹித் சர்மா பொறுமையாக விளையாடி வந்தார்.
திடீரென்று டிம் சவுதி வீசிய பந்தை கணிக்க முடியாத ரோகித் சர்மா கிளீன் போல்ட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி ஒரு ரன்னில் ஒரு விக்கெட் இழந்தது. இது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இதன் மூலம் ரோகித் சர்மா கடைசியாக விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டியில் ஒருமுறைதான் அரை சதம் அடித்திருக்கிறார். இந்த ஏழு இன்னிங்ஸில் ஐந்து முறை அவர் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் ரோகித் சர்மா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் இதுவரை 34 முறை டக் அவுட் ஆகி இருக்கும் நிலையில், அவருடைய சாதனை ரோகித் சர்மா சமன் செய்து இருக்கிறார். அணில் கும்ப்ளே 35 முறையும், ஹர்பஜன் 37 முறையும், விராட் கோலி 38 முறையும், இசாந்த் சர்மா 40 முறையும், ஜாகிர் கான் 43 முறையும் டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை 14 முறை டிம் சவுதி ஆட்டமிழக்க வைத்திருக்கிறார்.