மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை புதன்கிழமை பெங்களூருவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு போட்டிகளிலும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
சுமார் ஒரு ஆண்டாக முகமது ஷமி தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் தகுதியை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த தருணத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஷமி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு முட்டி பகுதியில் வீக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இது குறித்து செய்திகள் வெளியான போது ஷமி அதனை கடுமையாக மறுத்தார். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முகமது ஷமி தொடர்பான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி இடம்பெறுவாரா என்பது சொல்வது மிகவும் கடினம்.
ஏனென்றால் அவருடைய உடல் தகுதியை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காலில் முட்டி பகுதியில் வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அவர் தற்போது மீண்டும் ஓய்வில் இருக்கிறார். இதில் அடுத்து மீண்டும் அவர் தன்னுடைய உடல் தகுதியை மீட்கும் பணியில் ஆரம்பிக்கப் போகிறார்.தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி உள்ள ஷமியை மருத்துவர்களும் பிசியோ நிபுணர்களும் கண்காணித்து வருகின்றனர்.
ஒரு ஆண்டாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத ஷமியை ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எனினும் அவர் முழு உடல் தகுதியை பெற வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கின்றேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். இதனால் முகமது ஷமிக்கு பதில் ஆகாஷ் தீப் அல்லது மாயங் யாதவை பயன்படுத்த இந்திய அணி முயற்சி செய்து வருகிறது.