பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக ஒரே ஆண்டில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் இருவரும் ரன்களை சேர்க்க திணறினர். டிம் சவுதி மற்றும் ஹென்ரி இருவரும் பவுலிங்கில் மிரட்டலாக செயல்பட்டனர்.

இதனால் ரோஹித் சர்மா பவுண்டரி அடிக்க முடியாமல் திணறினர். எவ்வளவோ முயன்ற போதும், அவரால் பவுண்டரியை அடிக்க முடியவில்லை. ரோஹித் சர்மாவின் மனநிலையை புரிந்து கொண்ட டிம் சவுதி, அவரை தூண்டும் வகையில் ஃபுல் லெந்தில் பந்தை பிட்ச் செய்து இன்-ஸ்விங் செய்தார். ஃபுல் லெந்த் பந்திற்காக காத்திருந்த ரோஹித் சர்மா, அவசரமாக டவுன் தி டிராக் இறங்கி வந்தார்.
ஆனால் அந்த பந்து இன்-ஸ்விங்காகி நேராக ஸ்டம்பை தகர்த்து சென்றது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மா 16 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். சூழல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் போது, பேட்ஸ்மேன்கள் சில மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதே அடிப்படை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான விதியாகும்.
ஆனால் ரோஹித் சர்மா கொஞ்சம் கூட பொறுமையாக விளையாடாமல் அவசரப்பட்டு விக்கெட்டை பறிக் கொடுத்தார். ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் விமர்சனத்தை ஏற்படுத்தியது. 4 இன்னிங்ஸில் விளையாடி 42 ரன்களை மட்டுமே ரோஹித் சர்மா சேர்த்திருந்தார். இதனால் ரோஹித் சர்மா ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் மட்டும் 10வது முறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் அணியில் விளையாடி வரும் வீரர்களில், இவ்வளவு இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்திருப்பது ரோஹித் சர்மா தான்.
இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் ஃபார்மை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்றபடி பெங்களூர், புனே மற்றும் மும்பை என்று பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்களில் போட்டிகள் நடப்பதால், நிச்சயம் ஃபார்மை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.