மும்பை: ஐசிசி உலகக்கோப்பை தொடர்களின் அரையிறுதி போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருமுறை கூட அரைசதம் விளாசாதது ரசிகர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இந்திய அணி வீரர்கள் அபாரமான ஃபார்மில் இருப்பதால், நிச்சயம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கேப்டன் ரோகித் சர்மா சொந்த மண்ணில் களமிறங்கவுள்ளார்.

இதனால் ரோகித் சர்மாவின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் உட்பட 503 ரன்களை விளாசியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 4வது இடத்தில் இருக்கிறார்.
இதனால் நாக் அவுட் போட்டிகளில் ரோகித் சர்மா மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் நாக் அவுட் போட்டிகளில் ரோகித் சர்மா இதுவரை பெரியளவில் சோபிக்காதது தெரிய வந்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட அரையிறுதி போட்டிகளில் ஒரு முறை கூட அரைசதம் கூட அடித்ததில்லை என்பது தெரிய வருகிறது.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரோகித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல் 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல் 2013ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 33 ரன்களில் வெளியேறினார்.
ஆனால் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ரோகித் சர்மா 123 ரன்களை விளாசி இருக்கிறார். தரமான பவுலிங் அட்டாக் இல்லாத அணிகளுக்கு எதிரான ரோகித் சர்மா அடித்திருந்தாலும், சிறந்த அணிகளுக்கு எதிரான சொதப்பி வருகிறார். இதனால் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.