மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து இருக்கிறது.
மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினால் ஹாட்ரிக் தோல்வியை அடையும்.அது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பு பாழாகிவிடும். இந்த சூழலில் ரோகித் சர்மா குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி ரோகித் சர்மாவை மிகவும் காயமடைய வைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ரோகித் சர்மா பெருமை மிக்க நபராக இருக்கிறார். அவர் எப்போதுமே எந்த விஷயத்தையும் சாதாரணமாக எண்ணி விட மாட்டார். அவர் களத்தில் சாதாரணமாக நிற்பது போல் தெரியும். ஆனால் இந்த தோல்வி அவருடைய மனதில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கும்.
அவருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் காயத்தில் இருப்பார்கள். இதனால் மீண்டும் அவர் பலமாக ரன் குவிப்பார் என்று நம்புகிறேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ரோகித் சர்மா கடந்த நான்கு இன்னிங்ஸில் மொத்தமாகவே 62 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும்.
வங்கதேச தொடரில் கூட ரோகித் சர்மா நான்கு இன்னிங்சில் 42 ரன்கள் அடித்திருந்தார். இதனால் ரோகித் சர்மா மீதான விமர்சனம் அதிகரித்துக் கொண்டு போகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா ஒரு தொடரை இழந்து விட்டோம் என்பதற்காக நாங்கள் எதையும் மாற்றி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.எனினும் இதுபோன்ற சூழலில் இருந்து மீண்டு வரும் வழிகளை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று கூறியிருந்தார். இந்த சூழலில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் மூன்றாம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.