நியூசிலாந்து தொடர் வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடி தொடரைக் கைப்பற்றி உள்ளது. முதல்; மூன்று போட்டிகளின் முடிவிலேயே தொடரை 3 - 0 என கைப்பற்றியது இந்திய அணி. நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
தொடரைக் கைப்பற்றிய நிலையில், இந்திய அணி நிர்வாகம் மீதம் உள்ள இரண்டு டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, சஞ்சு சாம்சன், வாஷிங்க்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் அடுத்த இரு போட்டிகளில் வாய்ப்பு பெற்றனர்.
மூத்த வீரர்கள் ஓய்வு
ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி இருவரும் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சைனிக்கு இடம் அளித்து இரண்டு போட்டிகளில் விலகினர். சஞ்சு சாம்சனுக்கு துவக்க வீரராக வாய்ப்பு அளிக்க, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்த இரு போட்டிகளில் மாற்றி மாற்றி ஓய்வு எடுத்துக் கொண்டனர்.
கேப்டன் ரோஹித் சர்மா
நான்காவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வு எடுத்துக் கொண்டார். ஐந்தாவது டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டார். அதனால், துணை கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஐந்தாவது போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தியா பேட்டிங்
ராகுல் - சஞ்சு சாம்சன் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ராகுல் இந்த முறையும் சிறப்பாக ஆடினார். சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பில் சொதப்பினார். 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் 45 ரன்கள் எடுத்தார்.
ரோஹித் சர்மா காயம்
சஞ்சு சாம்சனுக்கு இடம் அளித்து மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார் ரோஹித் சர்மா. அவர் அபாரமாக ஆடி 41 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் ரன் ஓட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் 60 ரன்கள் அடித்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
கேப்டன் யார்?
அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா காயத்தால் பீல்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர் பந்துவீச்சின் போது களத்துக்கு வராவிட்டால் யார் அணியின் கேப்டனாக செயல்படுவார்? என்ற கேள்வி எழுந்தது.
ராகுலுக்கு வாய்ப்பு
இந்த நிலையில், கேஎல் ராகுல் அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஏற்கனவே, பேட்டிங் வரிசையில் துவக்கம் முதல் ஐந்தாம் வரிசை பேட்டிங் வரை அணிக்காக அனைத்து இடங்களிலும் பேட்டிங் செய்தார். பின், விக்கெட் கீப்பிங் பணியையும் கூடுதலாக செய்து வருகிறார்.
கூடுதல் சுமை
இந்த நிலையில், அணியின் கேப்டன் என்ற கூடுதல் சுமையும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவர் முதல் ஓவரை சுழற் பந்துவீச்சாளரான வாஷிங்டன் சுந்தரிடம் கொடுத்து ஆச்சரியம் அளித்தார். விராட் கோலி நியூசிலாந்து தொடரில் வேகப் பந்துவீச்சாளர்களிடமே முதல் ஓவரை கொடுத்து வரும் நிலையில், ராகுல் சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தினார்.
மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர்
அணியில் மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் உள்ளூர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் உள்ளவர்கள். இருவரும் இந்தியா ஏ அணிக்கும் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். எனினும், அவர்களை தாண்டி கேப்டன் பதவி ராகுலை தேடி வந்தது. அவர்கள் இருவரையும் விட ராகுல் அனுபவம் மிக்கவர் என்பதே இதற்கு காரணமாக இருக்கக்கூடும்.