மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை முழுமையாக இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் இந்திய அணி முழுமையாக தொடரை இழந்தது, இதுவே முதல் முறையாகும்.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகிறது. இன்னும் அவரால் ஒரு ஆண்டு தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும். ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக ரோகித் சர்மா இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது.
இதில் இந்திய அணி வெற்றி பெரும் வாய்ப்பு மிகவும் குறைவு. அது மட்டுமில்லாமல் சொந்த மண்ணிலேயே ரோகித் சர்மா தடுமாறி வருவதால், அந்நிய மண்ணில் ரன்கள் சேர்ப்பது என்பது மிகவும் கடுமையான விஷயமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா ஓய்வு முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, தான் இந்த தொடரில் சரிவர அணியை வழிநடத்த வில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டார். இந்த தோல்வியை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஒரு அணியாக நாங்கள் தோற்று விட்டோம் என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வார்த்தைகள் மூலம் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்து இருப்பதையே காட்டுவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா சொந்த பிரச்சனை காரணமாக ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தருணத்தில் ஏற்கனவே நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தோற்று இருப்பதால் பேசாமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் குட் பை சொல்லிவிடலாம் என்ற முடிவிற்கு ரோகித் சர்மா தள்ளப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.