மும்பை: 2020ஆம் ஆண்டில் இருந்தே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் ஃபார்மில் இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். சொந்த மண்ணிலேயே ரோஹித் சர்மா திணறியுள்ளதாக கூறிய அவர், இம்முறை ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்ததால், டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதனால் கடைசி போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியையாவது இந்திய அணி பெறுமா என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால், இந்தப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனிடையே இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகள் விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
வங்கதேச டெஸ்ட் தொடர், நியூசிலாந்து டெஸ்ட் தொடர் என்று தொடர்ச்சியாக 8 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், கடைசி 2 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
கடைசி 8 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். வங்கதேச டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் சேர்த்து 42 ரன்களும், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் சேர்த்து 62 ரன்களும் மட்டுமே சேர்த்துள்ளார். சொந்த மண்ணிலேயே ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் மோசமாகியுள்ளது.
கடைசி 50 ஆண்டுகளில் இந்திய அணியின் கேப்டனாக 20 போட்டிகளுக்கு மேல் செயல்பட்டுள்ள வீரர்களின் பேட்டிங் ஃபார்மை பார்த்தால், ரோஹித் சர்மாவின் பேட்டிங் தான் மோசமாக அமைந்துள்ளது. அதேபோல் கேப்டனாக இருக்கும் போது விராட் கோலியின் செயல்பாடுகள் உச்சத்தில் இருந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர், கங்குலி, கவாஸ்கர், ராகுல் டிராவிட், அசாரூதீன், தோனி உள்ளிட்ட யாரின் பேட்டிங் சராசரியும் 43க்கு குறைவாக இருக்கவில்லை.
ஆனால் ஆனால் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 37க்கும் குறைவாக இருக்கிறது. கேப்டனாக ஆடிய 20 போட்டிகளில் ரோஹித் சர்மா 1,181 ரன்களை சேர்த்துள்ளார். இதனால் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 35ஆக மட்டுமே இருப்பது சரியல்ல. அதேபோல் 2020ஆம் ஆண்டில் இருந்து சொந்த மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளை பார்க்கும் போதும், ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 36.9 ஆக மட்டுமே உள்ளது.
சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் தான் சொந்த மண்ணிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதனால் சீனியர் வீரர்களின் பேட்டிங்கால் இந்திய அணி தடுமாறி வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக சொந்த மண்ணிலேயே சொதப்பி வரும் ரோஹித் சர்மா, வெளிநாடுகளில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் எப்படி செயல்படுவார் என்ற சந்தேகம் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளார்.