மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்தால் மாபெரும் சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புனேவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் தொடக்க வீரராக களமிறங்கும் ரோஹித் சர்மா மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும்.
கடந்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அரை சதம் அடித்த நிலையில் புனே டெஸ்டில் அவர் பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் அவ்வாறு ரோஹித் சர்மா அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளரான டிராவிட் முந்த வாய்ப்பு இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 100 சதம் முதலிடத்திலும் விராட் கோலி 80 சதத்துடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். தற்போது மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மாவும் ராகுல் டிராவிட்டும் தலா 48 சதங்கள் அடித்து இருக்கிறார்கள். தற்போது ரோகித் சர்மா சதம் அடித்தால் 49 வது சதத்தை பெற்று டிராவிடை முந்தி விடுவார்.
இதேபோன்று ஷேவாக் மற்றும் கங்குலி ஆகியோர் தலா 38 சதங்கள் அடித்து நான்காவது இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஐந்தாவது இடத்தில் கவாஸ்கர் 35 சதங்களுடன் இருக்கிறார். ரோகித் சர்மா இன்னும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் விளையாட இருக்கிறார். இதில் ரோகித் சர்மா குறைந்தபட்சம் இரண்டு சதங்கள் அடித்தால் கூட சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 12 சதமும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 31 சதமும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐந்து சதமும் அடித்திருக்கிறார். ரோகித் சர்மா கடைசியாக 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் சதம் அடித்திருந்தார். அதன் பிறகு 6 இன்னிங்ஸில் அவர் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோரே 52 ரன்கள் தான். இதனால் ரோஹித் சர்மாவும் ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.