கோலி ஓய்வு
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது இந்திய அணி. இந்த நிலையில், ஐந்தாவது போட்டியில் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டார். இந்திய அணி துணை கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கியது.
பேட்டிங் வரிசை
கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். நான்காவது போட்டி போலவே இந்தப் போட்டியிலும் துவக்க வீரராக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்தது இந்திய அணி. ரோஹித் சர்மா மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார்.
ரோஹித் அபார ஆட்டம்
சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பில் சொதப்பலாக ஆடி ஆட்டமிழந்தார். அவர் 5 ரன்களில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அடுத்து வந்த ரோஹித் சர்மா, மற்றொரு துவக்க வீரர் கேஎல் ராகுலுடன் கூட்டணி அமைத்து சிறப்பாக ரன் குவித்தார்.
அரைசதம்
ராகுல் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். 35 பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார். அடுத்து 17 வது ஓவரின் போது அவருக்கு கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயத்துடன் பேட்டிங்
ரோஹித் சர்மாவால் நடக்க முடியாத நிலையிலும் தொடர்ந்து பேட்டிங் செய்தார். காயம் ஏற்பட்டதால் போட்டியில் அவர் ரன் ஓட முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், அவர் பவுண்டரி அடிக்கவே முயற்சி செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
சூப்பர் சிக்ஸ்
அவர் தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸ் அடித்து மிரட்டினார். பேட்டிங் செய்ய முடியாத நிலையிலும், அவர் சிக்ஸர் அடித்ததை கண்ட ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அடுத்த இரண்டு பந்துகளில் அவரால் பவுண்டரி அடிக்க முடியவில்லை.
ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்
ரன்னும் ஓட முடியாத நிலையில், அணிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ரோஹித் சர்மா ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவர் களத்தை விட்டு நடந்து சென்ற போது கூட சிரமப்பட்டு தான் சென்றார். அவர் சென்ற பின் இந்திய அணி ரன் குவிக்க தடுமாறியது.
இந்தியா ஸ்கோர்
20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 31 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். 163 ரன்கள் என்பது போட்டி நடந்த பே ஓவல் ஆடுகளத்தில் குறைந்த ஸ்கோராகவே கருதப்பட்டது.
ரோஹித் வரவில்லை
ரோஹித் சர்மா காயத்தால் இந்திய அணியின் பந்துவீச்சின் போது களத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்திய பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படவே இந்தப் போட்டியில் இந்திய அணி எளிதாக 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் தொடரில் ஆடுவார்
ரோஹித் சர்மா காயம் ஒருநாள் தொடர் துவங்குவதற்குள் சரியாகும் என நம்பப்படுகிறது. போட்டி முடிந்த உடன் தற்காலிக கேப்டன் ராகுல் கூறுகையில், இன்னும் இரு நாட்களில் ரோஹித் சர்மாவின் காயம் குணமாகக் கூடும் என்றார்.