நியூசிலாந்து தொடர்
நியூசிலாந்து நாட்டில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிவடைந்துள்ளது.
ரோஹித் சர்மா ஆட்டம்
டி20 தொடரில் இந்திய அணி 5 - 0 என்றார் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ரோஹித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது போட்டியில் சிறப்பாக ஆடி 65 ரன்கள் குவித்தார்.
ஓய்வு எடுத்தார்
நான்காவது டி20 போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டார் ரோஹித் சர்மா. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி இந்த முடிவை எடுத்தார் அவர். இந்திய அணியும் 3 - 0 என தொடரை கைப்பற்றி இருந்ததால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
காயம்
ஐந்தாவது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளித்து கேப்டன் விராட் கோலி, ஓய்வு எடுத்துக் கொண்டார். அதனால், ரோஹித் சர்மா ஐந்தாவது போட்டிக்கு கேப்டனாக இருந்தார். அந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து மீண்டும் அரைசதம் அடித்த ரோஹித், பேட்டிங் செய்த போது காயம் அடைந்தார்.
ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்
கணுக்காலில் காயம் அடைந்த ரோஹித் சர்மாவால் நடக்க முடியாத நிலையிலும், தொடர்ந்து பேட்டிங் செய்தார். ஒரு சிக்ஸ் அடித்த பின், ரன் ஓட முடியாததால் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அதன் பின் அவர் பீல்டிங் செய்த போது களத்துக்கு வரவில்லை. ராகுல் தான் கேப்டனாக இருந்தார்.
முன்னேற்றம் இல்லை
இந்த நிலையில், போட்டி முடிந்த பின்பும் ரோஹித் சர்மாவுக்கு வலி குறையவில்லை என கூறப்படுகிறது. முதற்கட்ட சிகிச்சைகளின் முடிவிலும் அவர் காயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், அவர் உடனடியாக போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது.
பிசிசிஐ அதிகாரி தகவல்
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய போது, "இந்த சுற்றுப் பயணத்தில் இனி அவர் இல்லை. தற்சமயம், அவர் காயம் நல்ல விதமாக இல்லை. பிசியோதெரபிஸ்ட் அவரை பரிசோதித்து வருகிறார். அது எந்த அளவு மோசமாக இருக்கிறது என்பதை இனி தான் பார்க்க வேண்டும்" என்றார்.
நிச்சயம் பங்கேற்க மாட்டார்
மேலும், காயம் குறித்த நிலை எப்படி இருந்தாலும், இந்த தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் நிச்சயம் பங்கேற்க மாட்டார் என அந்த பிசிசிஐ அதிகாரி உறுதியாக கூறி இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
மாற்று வீரர் யார்?
ஒருநாள் போட்டித் தொடரில் ஏற்கனவே ஷிகர் தவான் காயத்தால் விலகி உள்ள நிலையில், ராகுல், ரோஹித் சர்மா துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என திட்டமிட்டு இருந்தது இந்திய அணி. தற்போது ரோஹித் சர்மா இல்லாத நிலையில் மயங்க் அகர்வால் அல்லது ஷுப்மன் கில் ஒருநாள் அணியில் சேர்க்கப்படலாம்.
ராகுல் வருவார்
அதே போல, டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் துவக்கம் அளித்து வரும் நிலையில், தற்போது சிறப்பான பார்மில் இருக்கும் கேஎல் ராகுல், ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக அணியில் இடம் பெறுவார். ப்ரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரும் மாற்று வீரர்களாக அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.