தரம்சாலா: இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்க கூடாது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 4லும் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது.

அதேபோல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் மோதும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஃபினிஷர் ஆகிய இரு வீரர்களின் பணியை ஹர்திக் பாண்டியா ஒருவரே செய்து வந்ததால், இந்திய அணி எளிதாக அனைத்து போட்டிகளிலும் வென்று வந்தது. தற்போது அவர் காயமடைந்திருப்பதால், அவரது பணியை செய்யக் கூடிய சரியான 2 வீரர்களை பிளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசுகையில், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை போல் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் கிடையாது. ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இல்லையென்றால் மிட்செல் மார்ஷ், மிட்செல் மார்ஷ் இல்லையென்றால் கேமரூன் க்ரீன் என்று மூன்று வீரர்கள் ஒரே ரோலை செய்யக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.
ஆனால் இந்திய அணிக்கு அப்படியான வீரர்கள் இல்லை. அதனால் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்புவது மிகப்பெரிய பிரச்சனை தான். அவர் மூலமாக இந்திய அணியின் காம்பினேஷன் சிறப்பாக அமைந்தது. ஆனால் ஹர்திக் இல்லாததால் அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவையும், 10 ஓவர்களையும் வீசக்கூடிய சிறந்த பவுலரான முகமது ஷமியை ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சேர்க்க வேண்டும்.
இவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஆல்ரவுண்டராக சேர்க்க கூடாது என்று நினைக்கிறேன். நிச்சயமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு மிகப்பெரிய பரீட்சையாக அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.