ராஜ்கோட்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அதிரடி மன்னன் ரோஹித் சர்மா ரன் கணக்கை துவங்கவே நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு ரோஹித் சர்மா இதுபோன்ற நிதான துவக்கத்தை அளித்து இருக்கிறார். ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்று சொல்லப்பட்டாலும், ஆட்டத்தின் ஆரம்பம் இந்திய அணிக்குச் சற்று நிதானமாகவே அமைந்தது.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணியின் இன்னிங்ஸை ரோஹித் சர்மாவும், கேப்டன் சுப்மன் கில்லும் தொடங்கினர்.

வழக்கமாக முதல் பந்திலிருந்தே பவுண்டரி விளாசும் "ஹிட்மேன்" ரோஹித் சர்மா, இன்று சற்று திணறினார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் வீசிய துல்லியமான பந்துகளால் ரோஹித் சர்மா ரன் எடுக்க முடியாமல் தவித்தார்.
ரோஹித் சர்மா தனது முதல் ரன்னை எடுக்க 11 பந்துகளைச் சந்தித்தார். அதாவது 10 பந்துகள் டாட் பால்களாக அமைந்தன. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ரோஹித் சர்மா ரன் கணக்கை துவங்க இவ்வளவு பந்துகளை எடுத்துக்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்னதாக 2010-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் (புலவாயோ), ரோஹித் சர்மா ரன் கணக்கை தொடங்க 13 பந்துகளை எடுத்துக்கொண்டார். அதன்பிறகு தற்போது 16 வருடங்கள் கழித்து, தனது மெதுவான துவக்கத்தை இப்பொழுது பதிவு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்துக்கொண்ட ரோஹித் சர்மா தனது பாணியில் பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார். ஜேமிசன் ஓவரில் திணறினாலும், சாக் ஃபௌல்க்ஸ் ஓவரில் பவுண்டரிகளை விரட்டினார். பின்னர் அவர் 38 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடவில்லை.
இந்திய அணி 14 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களை எடுத்துள்ளது. நியூசிலாந்து பவுலர் கைல் ஜேமிசன் தனது முதல் 4 ஓவரில் 2 மெய்டன் ஓவர்களை வீசி, வெறும் 17 ரன்களை மட்டுமே கொடுத்து இந்தியத் துவக்க ஜோடிக்குக் கடும் நெருக்கடி கொடுத்தார்.