இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்களில் கூட ரன் குவிக்க முடியாமல் அவர் திணறியது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 338 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா சிறப்பான துவக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 13 பந்துகளை மட்டுமே சந்தித்து 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்தத் தொடர் முழுவதுமே ரோஹித் சர்மாவின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 26 ரன்கள், ராஜ்கோட்டில் நடந்த 2வது போட்டியில் 24 ரன்கள், இந்தூரில் நடந்த 3வது போட்டியில் 11 ரன்கள் என மொத்தம் 3 போட்டிகளிலும் சேர்த்து அவர் வெறும் 61 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
முன்னதாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால், இந்தத் தொடரில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக, ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி பேட்டிங் சராசரி 50-க்கு கீழே சரிந்துள்ளது. தற்போது அவரது சராசரி 49 ஆக குறைந்துள்ளது ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இந்த மூன்று போட்டிகளும் நடைபெற்ற மைதானங்கள் அனைத்துமே பேட்டிங்கிற்கு சாதகமானவை. 'பேட்டிங் சொர்க்கம்' என்று வர்ணிக்கப்படும் இந்தூர் போன்ற மைதானங்களில் 300 ரன்களை எளிதாக எட்ட முடியும். ஆனால், இத்தகைய சாதகமான சூழலிலும் ரோஹித் சர்மா பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறியது ஏமாற்றமே. அவர் நிச்சயம் சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப்போனது.
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற முனைப்புடன் ரோஹித் சர்மா உள்ளார். ஆனால், நியூசிலாந்து தொடரில் அவரது இந்த மோசமான செயல்பாடு அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி அடுத்து வரும் ஜூலை மாதத்தில்தான் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதுவரை ரோஹித் சர்மா சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்பதால், தனது ஃபார்மை நிரூபிக்க அவருக்கு நீண்ட இடைவேளை ஏற்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் சுப்மன் கில்லும் 23 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் விராட் கோலி களத்தில் நின்று நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட்டிங் செய்தார்.