பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பல சந்தர்ப்பங்களில் தவறான முடிவுகளை எடுத்ததாக விமர்சனம் எழுந்து உள்ளது. முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த சூழ்நிலையில் தோனி என்ன செய்திருப்பார்? என சுட்டிக் காட்டி ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சனம் செய்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் அன்று டாஸ் போடப்பட்டது. அப்போது ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என தவறாக கணித்த கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆனால், முதல் 30 ஓவர்களில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் அபாரமான ஸ்விங் பந்துகள் மற்றும் பவுன்சர்களை வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களை வீழ்த்தினர். இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த தவறான டாஸ் முடிவே இந்த நிலைக்கு காரணம்.
அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது இந்திய அணியும் விரைவாக விக்கெட்களை வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக நியூசிலாந்து அணி அதிரடியாக ரன் சேர்த்தது. துவக்கத்தில் நியூசிலாந்து அணியைப் போலவே இந்திய அணியும் வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து விக்கெட்களை வீழ்த்த முயற்சி செய்தது.
இது முதல் சில ஓவர்களுக்கு தொடர்ந்தது. அதை பயன்படுத்தி நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே 91 ரன்களை எடுத்தார். அடுத்து மூன்றாவது நாள் மதிய உணவு இடைவேளைக்கு முன் நியூசிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடினார்கள். அப்போது சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் அவர்கள் எளிதாக ரன் குவிக்கிறார்கள் என்பதை கணித்து வேகப் பந்துவீச்சாளர்களை பந்து வீச வைத்திருக்க வேண்டும்.
ஆனால், அதையும் கேப்டன் ரோஹித் சர்மா செய்யவில்லை. இதை சுட்டிக்காட்டி இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "எதிரணி நமக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தினால் பவுலர்களை மாற்றுவார். அது தோனியின் தனித்துவமான திறமை. ரோஹித் சர்மாவும் அதை தனது கேப்டன்சியில் கொண்டு வர வேண்டும்." என குறிப்பிட்டு இருக்கிறார்.