மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்டில் யாருமே எதிர்பாராத வகையில் ரோகித் படை தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் நியூசிலாந்து அணி தற்போது முன்னிலை பெற்று இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பெங்களூர் ஆடுகளம் நினைத்த மாதிரி சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை.

இதனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்கும் படி ஆடுகளப் பராமரிப்பாளர்களுக்கு அழுத்தம் நிச்சயம் இருக்கும். இந்தியாவுக்கு வேண்டிய ஆடுகளத்தை அவர்கள் அமைத்தால் நிச்சயம் அஸ்வினும் ஜடேஜாவும் அந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
பெங்களூர் ஆடுகளத்தில் பந்து லேசாக திரும்பியும் அஸ்வினும் ஜடேஜாவும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் முற்றிலும் சாதகமான வகையில் ஆடுகளத்தை பிசிசிஐ தயாரிக்கும். சுழற் பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுப்பார்கள். ஆனால் அப்படி ஒரு சூழல் கிடைத்தால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை விட நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.
இந்திய பவுலர்களை விட நியூசிலாந்து பவுலர்கள் அபாரமாக பந்து வீசக்கூடியவர்கள். பெங்களூர் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் சரியாக விளையாடவில்லை என்றாலும் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி போட்டியை வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு வந்தார்கள்.அது நிச்சயம் ஒரு சாம்பியன் அணிதான். கடைசிவரை போராடியது நிச்சயம் பிரம்மிக்க வைத்தது.
இதன் மூலம் இந்தியா ஒரு அபாயகரமான அணியாக இருக்கிறது. இந்திய அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். தன்னம்பிக்கை இழக்காமல் போராடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதனால் புனே மற்றும் மும்பையில் முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தால் அது இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை புனேவில் தொடங்குகிறது.