மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கானை, பேட்டிங் வரிசையில் எட்டாவது வீரராக களம் இறக்கியது ஏன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சு மஞ்சுரேக்கர் கேள்வி எழுப்பியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ்கான் மட்டும் முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் விளாசினார்.
ஆனால் அதன் பிறகு கடந்த நான்கு இன்னிங்ஸ்களாக அவரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுக்க இந்திய அணி 263 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதில் சர்பராஸ்கான் பேட்டிங் வரிசையில் எட்டாவது வீரராக களம் இறங்கினார். நான்கு பந்துகளை எதிர் கொண்ட அவர் டக் அவுட் ஆனார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்சுரேக்கர், மூன்று டெஸ்டில் மூன்று அரை சதம் அடித்து நல்ல ஃபார்மில் சர்பராஸ்கான் இருந்தார்.
பெங்களூர் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் எடுத்திருக்கிறார். சுழற் பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். இப்படி இருக்கும் பட்சத்தில் அவரை எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கியது மிகவும் தவறான விஷயமாக நான் கருதுகிறேன். இது ஒரு மோசமான முடிவாகும் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கில்லை பாராட்டிய சஞ்சய் மஞ்சுரேக்கர், டி20 50 ஓவர் போட்டிகளில் கில் தன்னுடைய திறமையை ஏற்கனவே வெளிப்படுத்தி விட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நன்றாக விளையாட வேண்டும் என்ற பொறுப்பு அவரிடம் இருக்கிறது. டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. மற்ற வீரர்களை காட்டிலும் கில் விளையாடிய போது கொஞ்சம் நிதானமும் பொறுமையும் தெரிந்தது.
இடதுகை சுழற் பந்துவீச்சுக்கு எதிராக அவர் இன்னும் பயிற்சி செய்ய வேண்டும். எனினும் களத்தில் நின்று ரன்களை சேர்க்க வேண்டும் என்ற உத்வேகம் அவரிடம் இருந்தது. இந்த இளம் வீரர்களுக்கு மத்தியில் கில், டெஸ்ட் கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாட வேண்டும் என்ற நினைப்பில் இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.