மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் உலக கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டு முறை சதம் அடித்து ஸ்ரேயாஸ், ராகுல் டிராவிட்டின் 24 ஆண்டு கால சாதனையை சமன் செய்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொண்டது.

தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 47 ரன்களும், கில் 79 ரன்களும் சேர்த்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் விராட் கோலி 113 பந்துகளில் 117 ரன்கள் சேர்க்க மறுமுனையில் அதிரடியை காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் சதம் விளாசினார்.
இதன் மூலம் இந்தியா 400 ரன்களை நெருங்குகிறது. மற்ற வீரர்கள் எல்லாம் சதம் போன்ற மைல்கள் நோக்கி விளையாடி வந்த நிலையில் ஸ்ரேயாஸ் மட்டும் அணியின் ஸ்கோரை கருத்தில் கொண்டு அதிரடியாக விளையாடி சதத்தையும் தன தாக்கி கொண்டார். சுழற் பந்துவீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என யார் பந்து வீசினாலும் ஸ்ரேயாஸ் அதிரடியை காட்டினார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் இருப்பாரா மாட்டாரா என்ற குழப்பம் இருந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து இந்தியாவுக்கு தேவையான இலக்கை சேர்த்துக் கொடுத்தார். பயிற்சியாளர் டிராவிட்டும் கேப்டன் ரோகித் சர்மாவும் ஸ்ரேயாஸ் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஸ்ரேயாஸ் அணிக்கே தேவையில்லை, அவரை உலக கோப்பையில் சேர்க்காதீர்கள் என்று பலரும் பேசி வந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தி இருக்கிறார். அதுவும் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் குவித்து தன்னுடைய திறமையை ஸ்ரேயாஸ் நிரூபித்து இருக்கிறார்.
இதன் மூலம் நமது வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம் மீது நம்பிக்கை இழந்தாலும் நாம் கடின உழைப்பை மேற்கொண்டு அதிரடியாக விளையாடினால் வெற்றி நிச்சயம் என்பது ஸ்ரேயாஸ் வாழ்க்கையை பார்த்து நாம் தெரிந்து கொள்ளலாம். ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்ற ஸ்ரேயாஸ்க்கு அனைத்து வீரர்களுமே கைத்தட்டி மரியாதையை கொடுத்தார்கள்.