மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை புனே நகரில் தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தற்போது ஒன்றுக்கு 0 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் ஆட்டம் இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் பெங்களூர் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கில் விளையாடவில்லை.

தற்போது கில்லுக்கு ஏற்பட்ட கழுத்து வலி குணமடைந்து இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் பிளேயிங் லெவனில் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கில் அணிக்கு திரும்புவதால் தற்போது இந்திய அணியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் கில்லுக்கு பதிலாக விளையாடிய சர்ஃபிராஸ் கான் இந்திய அணி தடுமாறியபோது 150 ரன்கள் விளாசி அசத்தினார்.
இந்திய அணியில் இருக்கும் சீனியர் வீரரான கே எல் ராகுல் டக் அவுட் மற்றும் 12 ரன்கள் தான் எடுத்தார். இதனால் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு சர்பராஸ்கான் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் கே எல் ராகுல் அணியின் சீனியர் வீரராக இருப்பதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க ரோகித் சர்மாவும் கௌதம் கம்பீரம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இதனால் கில் அணிக்கு வந்தால் சர்பராஸ்கான் தான் அணியை விட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இல்லையென்றால் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பதில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இந்தியா விளையாடினால் சர்பராஸ்கானுக்கு அணியில் இடம் கிடைக்கும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோசேட், ஆறு இடத்திற்கு 7 பேர் போட்டி போடுவதாக கூறியுள்ளார். இதனால் யாருக்கு ரோகித் சர்மா இடம் வழங்கப் போகிறார் என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.