வதோதரா: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2026-ம் ஆண்டின் முதல் ஒருநாள் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. வதோதராவில் உள்ள கோட்டாம்பி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சுப்மன் கில், முதன்முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்றார். இதற்கு ஆஸ்திரேலியாவில் மட்டுமே அவர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் சுப்மன் கில், ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் அணியில் இருந்தும், கில் தலைமையில் இந்தியா களமிறங்கியது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சுப்மன் கில் கேப்டனாக இருந்தாலும், ஆடுகளத்தில் உண்மையான கேப்டன்களாக ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் செயல்பட்ட விதம் ரசிகர்களை நெகிழ வைத்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு, அணியினர் அனைவரும் வட்டமாக நின்றபோது, விராட் கோலி வீரர்கள் மத்தியில் ஆக்ரோஷமாக பேசினார். இளம் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், குறிப்பாக கேப்டன் கில்லுக்கு ஆதரவாக கோலியின் வார்த்தைகள் அமைந்திருந்தன.
அதேபோல், ஆட்டத்தின் முதல் ஓவரை முகமது சிராஜ் வீசியபோது, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தானே முன்வந்து ஆலோசனைகளை வழங்கினார். சிராஜின் ரன்-அப் மற்றும் பந்துவீச வேண்டிய லைன் & லென்த் குறித்து ரோஹித் அறிவுரை வழங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
"கேப்டன் கில் பதற்றம் அடையாமல் இருக்க, நாங்கள் துணையாக இருக்கிறோம்" என்று சீனியர் வீரர்கள் இருவரும் சொல்லாமல் சொல்லி, அணியை வழிநடத்தியது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த தொடரில் விராட் கோலி விஸ்வரூபம் எடுத்திருந்தார். 3 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 151 சராசரியுடன் 302 ரன்களை அவர் குவித்திருந்தார். அதேபோல் ரோஹித் சர்மாவும் 146 ரன்கள் விளாசி சிறப்பான ஃபார்மில் உள்ளார். இந்த மூத்த வீரர்களின் உச்சகட்ட ஆட்டமும், வழிகாட்டுதலும் இளம் கேப்டன் கில்லுக்கு இந்தத் தொடரில் பெரும் பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையில், வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ்டியன் கிளார்க் அறிமுகமாகியுள்ளார்.
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.