இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி குறித்து கேப்டன் சுப்மன் கில் மனம் திறந்து பல்வேறு விசயங்கள் குறித்து பேசினார். இந்தூரில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து இந்தியாவில் தனது முதல் ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. அனைத்துத் துறைகளிலும் நியூசிலாந்து சிறப்பாகச் செயல்பட்டதாக கில் குறிப்பிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்மன் கில், "எங்கள் ஃபில்டிங் இந்தத் தொடரில் திருப்திகரமாக இல்லை. முக்கியமான ஆட்டக் கட்டங்களில் சில கேட்ச்களை தவறவிட்டோம். பந்துவீச்சாளர்கள் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள், யாரும் வேண்டுமென்றே கேட்ச்களைக் கைவிடுவதில்லை, ஆனால் இதில் நாம் நிச்சயம் மேம்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

டேரில் மிட்செல் 131 பந்துகளில் 137 ரன்கள் விளாசி இந்தியாவின் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். இது குறித்து பேசிய கில், "அவர் அருமையாக பேட் செய்கிறார். அவருக்கு எதிராக நாங்கள் திட்டமிட்டோம்.ஆனால் ஒரு பேட்டர் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும்போது, திட்டங்களைச் செயல்படுத்த முடிவதில்லை," என்றார். மிட்செல் இந்தூர் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும், மூன்று இன்னிங்ஸ்களில் 352 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
ரோஹித் ஒரு அரைசதம் கூட இந்த தொடரில் அடிக்கவில்லை, குல்தீப் பந்துவீச்சில் ஃபார்மில் இல்லை. ரோஹித் குறித்துப் பேசிய கில், "அவர் ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே சிறந்த ஃபார்மில் இருக்கிறார். தொடக்கங்களை எப்போதும் பெரிய ஸ்கோராக மாற்ற முடிவதில்லை. குல்தீப் எப்போதும் எங்களுக்கு ஒரு முக்கிய பந்துவீச்சாளர். அவர் விரும்பிய அளவுக்கு விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், இது போன்ற விஷயங்கள் நடக்கத்தான் செய்யும்," என்று கில் தெரிவித்தார்.
ரோஹித் மூன்று இன்னிங்ஸ்களில் 61 ரன்களும், குல்தீப் மூன்று விக்கெட்டுகளை 60.66 சராசரி, 7.28 ரன் விகிதத்துடன் எடுத்தனர். இந்திய அணியின் ஹர்ஷித் ராணா பேட்டிங்கை ஷுப்மன் கில் பாராட்டினார். "முதல் ஒருநாள் போட்டியில் அவர் ஆடிய விதம், மற்றும் இந்தப் போட்டியில் அவர் பேட்டிங்கில் உண்மையிலேயே மேம்பட்டு வருகிறார். எட்டாவது வரிசை எங்களுக்கு மிக முக்கியமான நிலை. உலகிலுள்ள மற்ற எல்லா அணிகளும் கீழ்வரிசை வீரர்கள் பேட்செய்கின்றன. பேட் செய்யக்கூடிய வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதே எங்கள் நோக்கம்."
ஹர்ஷித் முதல் ஒருநாள் போட்டியில் வதோதராவில் 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மொத்தம் ஏழு ஒருநாள் இன்னிங்ஸ்களில், அவர் 24.80 சராசரி மற்றும் 121.56 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 124 ரன்கள் எடுத்துள்ளார். அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மறக்க கூடியதாக அமைந்தது.மூன்று இன்னிங்ஸ்களில் அவர் முறையே 4, 27, 12 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சிலும் ஜடேஜா விக்கெட்டுகளை எடுக்கத் தவறியதுடன், ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இது குறித்து பேசிய கில், "கடந்த சில ஆண்டுகளில் அவர் எத்தனை போட்டிகளில் விளையாடியிருக்கிறார் என்று தெரியாது. ஆனால் அவரது பேட்டிங்கைப் பொறுத்தவரை, அவர் நல்ல ஃபார்மில் இருப்பதாகத் தோன்றியது. இருப்பினும், இந்தத் தொடரில் எந்த ஒரு பேட்டரும் தொடக்கங்களை பெரிய ஸ்கோர்களாக மாற்ற முடியவில்லை. இது எப்போதும் கடினம்தான்," என்று விளக்கினார்.