மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முழுமையாக தோல்வியை தழுவி ஒயிட்வாஷ் ஆகி இருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு கடினமாக இருக்கிறது.
எஞ்சிருக்கும் 5 டெஸ்ட் போட்டிகளில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்த நிலையில் இந்திய அணி கேப்டனான ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒட்டுமொத்தமாகவே 100 ரன்கள் கூட சேர்க்கவில்லை.

ரோகித் சர்மா அதற்கு முன்பு நடைபெற்ற வங்கதேச தொடரில் மொத்தமாகவே 50 ரன்கள் எடுக்கவில்லை. இதனால் ரோகித் சர்மாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அவருக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ரோகித் சர்மா ஒவ்வொரு ஷாட்டையும் லாவகமாகவும் ஸ்டைல் ஆகவும் ஆடக்கூடிய வீரராக இருக்கிறார்.
இதன் காரணமாகவே ரோகித் சர்மா ஷாட் ஆடும் போது அவர் கவன குறைவாக விளையாடுகிறார் என்று ரசிகர்கள் குறை கூறுகின்றனர். இதே போல் ஒரு பிரச்சினையை இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் டேவிட் கோவர் பெற்றிருந்தார். ரோகித் ஆடும் ஷாட்டுகள் எல்லாம் பார்ப்பதற்கு ஈசியாக தெரியும். இதனால்தான் அவர் ஆட்டம் இழக்கும் போது ரசிகர்கள் அவர் எந்த கவலையும் இல்லாமல் பொறுப்பின்றி விளையாடி ஆட்டம் இழந்து விடுகிறார் என்று குறை சொல்வது உண்டு.
ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் எல்லாம் தங்களுடைய விக்கெட்டை கொடுக்கக் கூடாது என்று நினைப்பார்கள். மேலும் முடிந்தவரை எவ்வளவு ரன்கள் வேகமாக அடித்து விட வேண்டுமோ, அதனை செய்ய வேண்டும் என்று காலத்தில் நிற்பார்கள். இதன் காரணமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிம்பிளாக தெரியும்.
இது ரோகித் சர்மாவின் சுபாவம். இதனால் அவரை குறை கூறக்கூடாது. சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறியது உண்டு. குறிப்பாக இந்த வீரர்கள் எல்லாம் பேட்டிங்கிற்கு சுலபமான ஆடுகளத்தில் விளையாடவில்லை. பெங்களூரில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
அதே சமயம் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்றால் உங்களுக்கு அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். சில சமயம் வீரர்கள் கேட்ச் தவற விடுவது, எல் பி டபிள்யு அவுட் ஆகாமல் தப்பிப்பது,ஸ்டெம்புக்கு அருகில் பந்து செல்வது போன்ற விஷயங்கள் எல்லாம் அதிர்ஷ்டம் இருந்தால் தான் சரியாக நடக்கும் என்று கவாஸ்கர் கூறியிருக்கிறார்.