IND vs NZ: இன்னும் 41 ரன்கள் தான் தேவை.. ரோஹித், விராட் கோலி வரிசையில் இணையப்போகும் சூர்யகுமார்
விசாகப்பட்டினம்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிவிட்டாலும், இன்றைய போட்டி கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த அவருக்குச் சில ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3000 ரன்களைக் கடப்பது என்பது ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை இதுவரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரண்டு ஜாம்பவான்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

தற்போது சூர்யகுமார் யாதவ் அந்தப் பட்டியலில் இணையத் தயாராக உள்ளார். இன்றைய போட்டியில் அவர் இன்னும் 41 ரன்கள் எடுத்தால், சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இந்திய அணிக்காக அதிக சர்வதேச டி20 ரன் குவித்த வீரர்களின் விவரம்:
ரோஹித் சர்மா: 159 போட்டிகளில் 4231 ரன்கள்
விராட் கோலி: 125 போட்டிகளில் 4188 ரன்கள்
சூர்யகுமார் யாதவ்: 102 போட்டிகளில் 2959 ரன்கள் (தற்போதைய நிலவரம்)
விராட் கோலிக்கு அடுத்து சூர்யகுமார்
உலக அளவில் டி20 போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த 12வது வீரராக சூர்யகுமார் யாதவ் உருவெடுப்பார். விராட் கோலி இந்தச் சாதனையை 81 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தினார். சூர்யகுமார் யாதவ் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் 41 ரன்களைக் குவித்துவிட்டால், விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் தட்டிச் செல்வார்.
கடந்த ஆண்டு இறுதியில் சற்று சறுக்கலைச் சந்தித்த சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் மீண்டும் தனது பழைய அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பியுள்ளார். இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் 171 ரன்கள் குவித்து, தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 200க்கும் மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என்பதால், சூர்யகுமார் யாதவ் இந்தச் சாதனையை இன்றே நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.


Click it and Unblock the Notifications