அகமதாபாத்: நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன. கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, மழை குறுக்கிட்டால் போட்டியின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இறுதிப் போட்டிக்கான ஐசிசி விதிமுறைகள் என்ன என்பதை இங்கே காண்போம்.
ஐசிசி விதிமுறைப்படி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குக் கூடுதல் நாள் அல்லது ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை காரணமாகப் போட்டியை முழுமையாக நடத்தி முடிக்க முடியவில்லை என்றால், நாளை (திங்கட்கிழமை) அந்தப் போட்டி தொடர்ந்து நடைபெறும்.

முக்கியமாக, மழையால் ஆட்டம் எந்த இடத்தில் தடைபட்டதோ, அங்கிருந்துதான் மறுநாள் போட்டி தொடங்குமே தவிர, முதலில் இருந்து ஆட்டம் தொடங்கப்பட மாட்டாது. இன்று போட்டியை முடிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதுவும் சாத்தியமில்லை என்றால்தான் போட்டி நாளைக்கு மாற்றப்படும். போட்டி நாளன்று முழுமையாக போட்டி நடைபெறவில்லை என்றால் மட்டுமே கூடுதல் நாள் அன்று போட்டி முதல் ஓவரில் இருந்து புதிதாக தொடங்கப்படும்.
பொதுவாக லீக் சுற்றுகளில் மழை குறுக்கிட்டால், இரு அணிகளும் தலா 5 ஓவர்கள் விளையாடி இருந்தாலே டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். ஆனால், நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டிக்கான விதிமுறை சற்று வித்தியாசமானது.
இறுதிப் போட்டியில் முடிவு தெரிய வேண்டும் என்றால், இரு அணிகளும் குறைந்தபட்சம் தலா 10 ஓவர்களாவது பேட்டிங் செய்திருக்க வேண்டும். 10 ஓவர்களுக்குக் குறைவாக வீசப்பட்டால் போட்டியின் முடிவு அறிவிக்கப்படாது. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டாலும், இந்த 10 ஓவர் விதிமுறை கட்டாயம் பின்பற்றப்படும்.

ஒருவேளை இன்றும், நாளையும் என இரண்டு நாட்களுமே மழை காரணமாகப் போட்டியை நடத்த முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ரிசர்வ் டே அன்றும் ஆட்டம் சாத்தியமில்லை என்றால், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதாவது, டி20 உலகக் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இரு அணிகளும் கூட்டுச் சாம்பியன்களாக அறிவிக்கப்படுவர்.
ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், அகமதாபாத் மைதானத்தில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. வானம் தெளிவாக இருக்கும் என்றும், போட்டிக்கு உகந்த சூழல் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அரையிறுதிப் போட்டிகள் மழையின்றி நடைபெற்றது போலவே, இறுதிப் போட்டியும் முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.