கடும் சவால்?
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி கடும் சவாலை சந்திக்கும் என தொடருக்கு முன்பு சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாகவே இருந்தது இந்த தொடர்.
முதல் மூன்று போட்டிகள்
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி எளிதாக வென்றது. மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு மிக அருகே சென்றது. எனினும், கடைசி ஓவரில் சொதப்பி போட்டி டை ஆனது. பின் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது. தொடரையும் 3 - 0 என கைப்பற்றியது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி முழு பலத்துடன் ஆடவில்லை. சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்கள் வாய்ப்பு அளித்து ஓய்வு எடுத்துக் கொண்டனர். இருந்த போதிலும், இந்தியா அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றது.
மீண்டும் சூப்பர் ஓவர்
நான்காவது போட்டியில் இந்திய அணி தோல்விக்கு மிக அருகே இருந்தது. மூன்றாவது போட்டி போலவே இந்த முறையும் நியூசிலாந்து அணி தாமாகவே வந்து வலையில் சிக்கி, போட்டியை டை செய்தது. அடுத்து இந்திய அணி சூப்பர் ஓவரில் போட்டியை வென்றது.
கேப்டன் மாற்றம்
ஐந்தாவது போட்டியில் இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி ஆடவில்லை, ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார். பந்துவீச்சின் போது அவரும் காயத்தால் களமிறங்க முடியவில்லை. கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்க இந்திய அணி போராடி வென்றது.
முதல் வைட்வாஷ் வெற்றி
இந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்ற இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் தன் முதல் வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்தது. மேலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவே ஒரு அணியின் முதல் வைட்வாஷ் வெற்றி ஆகும்.
நியூசிலாந்து பரிதாபம்
இந்த தொடரில் ஐந்து போட்டிகளை தோற்ற நியூசிலாந்து அணி, அத்துடன் சேர்த்து சொந்த மண்ணில் 23 டி20 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இலங்கை அணியுடன் சேர்ந்து, சொந்த மண்ணில் அதிக டி20 போட்டிகளில் தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையையும் செய்துள்ளது நியூசிலாந்து.
இந்திய அணி சாதனை
இந்த தொடரின் இறுதியில் இந்திய அணி தொடர்ந்து எட்டு போட்டிகளை வென்றுள்ளது. இந்திய அணி இதற்கு முன் மூன்று முறை தொடர்ந்து ஏழு போட்டிகள் வரை வென்றுள்ளது. அதை உடைத்து இந்த முறை எட்டு போட்டிகளை எட்டி உள்ளது.
மூன்றாவது வைட்வாஷ் வெற்றி
வெளிநாடுகளில் நடந்த டி20 தொடர்களில் இது இந்திய அணியின் மூன்றாவது வைட்வாஷ் வெற்றி ஆகும். முன்னதாக ஆஸ்திரேலியாவில் 2016 ஆம் ஆண்டிலும், வெஸ்ட் இண்டீஸில் 2019 ஆம் ஆண்டிலும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் வைட்வாஷ் வெற்றி பெற்றுள்ளது.
ஒருநாள் தொடர்
இந்திய அணி அடுத்து நியூசிலாந்து நாட்டில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 5 அன்று நடக்க உள்ளது.