விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் துவக்க வீரர் டிம் சீஃபர்ட். அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 62 ரன்கள் குவித்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. போட்டிக்குப் பின் பேசிய அவர், தனது பேட்டிங் உத்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொண்ட விதம் குறித்து பேசினார்.
தனது இன்னிங்ஸ் குறித்துப் பேசிய டிம் சீஃபர்ட், "ஆட்டத்தின் ஆரம்பத்தில் எனக்குச் சற்று அதிர்ஷ்டம் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். சில பந்துகள் பேட்டின் விளிம்பில் பட்டு பவுண்டரிக்குச் சென்றன. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இது சகஜம். இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் களமிறங்கினோம். அந்த முயற்சிக்கு அதிர்ஷ்டமும் கை கொடுத்ததால், பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களைக் குவிக்க முடிந்தது" என்று கூறினார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொண்டது குறித்துப் பேசிய அவர், "கடந்த போட்டியில் பும்ரா ஒரு அற்புதமான பந்தின் மூலம் என்னை வீழ்த்தினார். அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.
இன்று அவரை எதிர்கொள்ளும் போது, பந்தை நேராக அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பும்ரா வீசும் முதல் பந்தை மட்டும் சரியாகக் கணித்துவிட்டால், அதன் பிறகு அவரைச் சமாளிப்பது சற்று எளிதாகிவிடும். அதைத்தான் நான் இன்று செய்தேன்" என்று தனது ரகசியத்தைப் பகிர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு ஆடுகளமும் ஒவ்வொரு விதமாகச் செயல்படும். அடுத்த போட்டி மற்றும் உலகக்கோப்பைத் தொடர் என எங்குச் சென்றாலும், அங்குள்ள சூழலுக்கு ஏற்ப நாம் மாறிக் கொள்ள வேண்டும். இந்தத் தொடரில் ஆடுகளங்கள் அதிக ரன் குவிப்புக்குச் சாதகமாக உள்ளன. எனவே தொடர்ந்து அதிரடியாக விளையாடி, பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தைப் போடுவதுதான் எங்களின் முக்கியத் திட்டமாக உள்ளது. இந்த வெற்றி உலகக்கோப்பைத் தொடருக்கு எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்" என்று தெரிவித்தார்.
இப்போட்டியில் டிம் சீஃபர்ட் மற்றும் டெவோன் கான்வே ஜோடி முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.