மும்பை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி அதிரடியாக ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து சுப்மன் கில் - விராட் கோலி கூட்டணி இணைந்து சிறப்பாக ஆடியது. சுப்மன் கில் அதிரடியாக ரன்களை குவிக்க, விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 79 ரன்களில் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேற, கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பு விராட் கோலியிடம் வந்தது.
அதன்பின் சிறப்பாக ஆடிய விராட் கோலி, 59 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்பின் விராட் கோலி அதிரடியாக சில சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை விளாச, வான்கடே மைதானமே விராட் கோலி கோஷத்தால் அதிர்ந்தது. தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் தன் பங்கிற்கு ஸ்பின்னர்களை பொளந்து கட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு சிக்ஸ் அடிப்பதை ஸ்ரேயாஸ் ஐயர் வழக்கமாக மாற்றினார்.
இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 36 ஓவர்களிலேயே 250 ரன்களை கடந்தது. இந்த நிலையில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 90 ரன்களை கடந்தார். இதனால் விராட் கோலி சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஃபெர்குசன் வீசிய 41.4வது பந்தில் 2 ரன்களை விளாசிய விராட் கோலி, 106 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஐசிசி உலகக்கோப்பை தொடர்களில் 10 ரன்களை கூட தாண்டாமல் இருந்த விராட் கோலி, முதல்முறையாக சதம் விளாசி வரலாற்றையும் மாற்றியுள்ளார். இவர் சதம் விளாசிய பின் வான்கடே மைதானத்தில் இருந்த ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் எழுந்து நின்று கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தார்.