துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்திய அணி கடைசியாக 2013 ஆம் ஆண்டு தான் 50 ஓவர் போட்டிகளில் ஐசிசி தொடரை வென்றது.
அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவுக்கு ஐசிசி தொடரை வெல்லும் வாய்ப்பு ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்து வந்தனர். அப்போது வேகப்பந்து வீச்சை எதிர்கொண்ட விராட் கோலிக்கு முட்டியில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதை அடுத்து வலியால் துடித்த விராட் கோலி பயிற்சியை நிறுத்தியதாகவும், அதன் பின்னர் மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அந்த இடத்தில் பேண்ட் எட்ஜ் போடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
விராட் கோலிக்கு லேசான வலி இருந்தும் அவர் தொடர்ந்து மைதானத்தில் இருந்து மற்ற வீரர்கள் பயிற்சி செய்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய அணியின் பயிற்சி குழு விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம் ஒன்றும் பயப்படும் வகையில் தீவிரமானது கிடையாது. இன்னும் இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் இடையில் இருக்கிறது.
அதற்குள் விராட் கோலி உடல் தகுதியை எட்டி விடுவார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கோலி பைனலில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை ஐசிசி நாக்கவுட் சுற்று போட்டிகளில் நியூசிலாந்து இந்தியாவும் நான்கு முறை மோதி இருக்கின்றன. இதில் நியூசிலாந்து மூன்று முறையும் இந்தியா ஒரே ஒரு முறை தான் வெற்றி பெற்றிருக்கிறது.
துபாயில் ஏற்கனவே விளையாடிய அனுபவம் தற்போது நியூசிலாந்துக்கு இருப்பதால் அவர்கள் இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்தை கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரை 2000 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவை பைனலில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.