மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
விராட் கோலி கடந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு விளையாடிய 11 இன்னிங்ஸில் வெறும் ஒருமுறைதான் அரை சதம் அடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் விராட் கோலியின் சராசரி 22.25 என்ற அளவில் இருக்கின்றது.

கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் அடித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் ஆகப்போகிறது. விராட் கோலியும், ரோகித் சர்மாவும் சரியாக விளையாடாத காரணத்தால் தான் இந்திய அணி தோல்வியை தழுவுகிறது. இந்த நிலையில் விராட் கோலி குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் அளித்துள்ள சில கருத்தை தற்போது பார்க்கலாம்.
இது குறித்து பேசிய அவர், விராட் கோலி ஒரு வாத்து போன்றவர். வாத்து தண்ணீருக்கு செல்லும்போதுதான் அது புத்துணர்ச்சியுடன் உணரும். அதே போல் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணுக்கு சென்றால் அங்கு அவர் ரன்களை குவிப்பார். ஏனென்றால் விராட் கோலிக்கு ஆஸ்திரேலியா ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று தெரியும். எனவே மும்பை டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பார் என நினைக்கின்றேன்.
விராட் கோலிக்கு சவால்கள் என்றால் மிகவும் பிடிக்கும் விராட் கோலி போன்ற சாம்பியன் கிரிக்கெட் வீரர்கள் அவர்களுக்கு சவால்கள் எழும்பும்போது தான் சிறப்பான கிரிக்கெட்டை வெளிக்கொண்டு வருவார்கள். ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் குவிக்க வேண்டும் என்று விராட் கோலி நிச்சயம் நினைப்பார்.
ரோகித் சர்மா கூட 2018 அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நல்ல ஒரு இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். விராட் கோலியின் ரோஹித் சர்மாவும், ஆஸ்திரேலிய மண்ணில் சரியாக விளையாடவில்லை என்றால் மற்ற கிரிக்கெட் வீரர்களும் தடுமாறுவார்கள் என்று எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1352 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 54 ஆகும்.