மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸிலும் ஆடிய விராட் கோலி வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுக்க இந்திய அணி போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இந்திய அணியின் பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு அசத்தினர்.

இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு நியூசிலாந்து அணி வெறும் 147 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. அதிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் ஆட்டமிழந்த அவர், 2வது இன்னிங்ஸில் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி உள்ளார். விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு போட்டியின் இரு இன்னிங்ஸிலும் பேட்டிங் ஆடி சேர்த்துள்ள குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். அதேபோல் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 13 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார்.
இதுவும் விராட் கோலி 2 இன்னிங்ஸிலும் விளையாடி எதிர்கொண்ட குறைந்த பந்துகளாகும். இதனால் விராட் கோலியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சொந்த மண்ணிலேயே இப்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்ஸிலும் விளையாடியுள்ள விராட் கோலி மொத்தமாக 93 ரன்களை மட்டும் சேர்த்திருக்கிறார். அதிலும் பெங்களூர் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி 70 ரன்களை சேர்த்திருந்தார். இதனால் விராட் கோலி மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.