பெங்களூர் : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் இந்திய அணி படுதோல்வியை தழுவி இருக்கிறது. முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததை தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய அணி கடந்த 12 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழந்ததே கிடையாது. ஆனால் தற்போது இந்தியா பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே திருப்திகரமான அளவில் இல்லை.

அதே போன்று கே எல் ராகுல் முதல் இன்னிங்சில் டக் அவுட், இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்கள் எடுத்திருந்தார்.இந்த சூழலில் ரஞ்சி கோப்பையில் அபாரமாக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிசிசிஐ சேர்த்து இருக்கிறது.
அண்மையில் டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 152 ரன்கள் பேட்டிங்கில் விளாசினார். பந்து வீச்சிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் வாஷிங்டன் சுந்தரை உடனடியாக இந்திய அணியில் பிசிசிஐ சேர்த்து இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலமடைய வாய்ப்பு இருக்கிறது.
இந்த சூழலில் வாஷிங்டன் சுந்தர் யாருக்கு பதிலாக சேர்க்கப்படுவார் என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கிறது. கில் காயம் இன்னும் சரியாகவில்லை என்றால் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெறலாம். இல்லையென்றால் கே.எல். ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாடலாம். இதன் மூலம் சர்பராஸ் கான் இடம் அணியில் உறுதியாகி இருக்கிறது.கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 வயதான வாஷிங்டன் சுந்தர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். சமீபத்தில் அவர் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் சுந்தர் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 265 ரன்கள் அடித்திருக்கிறார் இதில் மூன்று அரை சதம் அடங்கும். பந்துவீச்சில் அவர் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.