புனே: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பூனேவில் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாத்தம் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் வீசிய அவரது முதல் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார்.

கான்வே மற்றும் வில் யங் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வில் யங் 18 ரன்களில் ஆட்டம் இழக்க சிறப்பாக விளையாடிய கான்வே,அரை சதம் கடந்து இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். எனினும் அஸ்வின் தன்னுடைய அனுபவ பந்துவீச்சில்ல் அவரை 76 ரன்களில் ஆட்டமிழ்க்க செய்தார்.
எனினும் ரச்சின் ரவீந்திரா மீண்டும் அரைசதம் அடித்து நியூசிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்று இருந்தார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய பந்துவீச்சில் மேஜிக்கை காட்டினார். வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து மூன்று ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார்.
ரச்சின் ரவீந்திரா 65 ரன்களிலும், டாம் பிளண்டல் மூன்று ரன்களிலும் டேரல் மிட்செல் 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். வாஷிங்டன் சுந்தர் வீசிய சுழற் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் தடுமாறினர். சிஎஸ்கே வீரர் மிச்செல் சாண்ட்னர் மட்டும் 51 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 59 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.இதேபோன்று அனுபவ வீரரான அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்துக்கு எதிரான ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் தமிழக கிரிக்கெட் வீரர்களே வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. இது நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 243 ரன்கள் பின்தங்கியுள்ளது.