புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அனுபவ வீரரான புஜாராவை மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி வெறும் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி இருக்கிறது. இதனால் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி வருகிறது.

2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியை விரைவாக ஆல் அவுட் செய்யவில்லை என்றால், இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்கம் சூழல் உருவாகும். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருக்கிறது. இதனால் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இளம் வீரர்களான சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அதிரடி ஆட்டக்காரர்கள் என்பதால், முழுக்க முழுக்க சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரையும் நம்பியே இந்திய அணி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும் 2 முறை இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி ஆல் அவுட்டாகி இருக்கின்றனர். இதற்கு காரணமாக இந்திய அணியில் நிலைத்து நின்று விளையாட கூடிய பேட்ஸ்மேன் இல்லாதது தான். குறிப்பாக விக்கெட்டுகள் சரியும் போது ஒரு முனையில் நிலைத்து நின்று ஒரு பேட்ஸ்மேன் காக்க வேண்டும்.
அப்படியொரு வீரராக இந்திய அணியை 10 ஆண்டுகளுக்கும் மேலாக காப்பாற்றி வந்த புஜாரா, கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வெளியில் அனுப்பப்பட்டுள்ளார். ஃபார்மில் இல்லை என்று கூறினாலும், தற்போது ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் விளாசி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இதனால் புஜாராவை மீண்டும் இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.
ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களிடம் மாட்டிக் கொண்ட இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் ஸ்பின்னர்களிடம் மாட்டிக் கொண்டுள்ளது. 2 போட்டிகளிலும் இரு வகையான பவுலர்களிடமும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கின்றனர். இதனால் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு பதிலாக புஜாராவை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று விவாதிக்க தொடங்கியுள்ளனர்.