பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் அதிரடி சதம் விளாசியதற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் வீரர் சர்ஃபராஸ் கான், வங்கதேச டெஸ்ட் தொடரில் பெஞ்ச் செய்யப்பட்டார். இதன்பின் துலீப் டிராபி தொடரில் சர்ஃபராஸ் கான் விளையாட வைக்கப்பட்ட சூழலில், தொடர்ந்து இராணி கோப்பையிலும் விளையாட அறிவுறுத்தப்பட்டார். இராணி கோப்பையில் அசத்தலாக விளையாடிய சர்ஃபராஸ் கான், இரட்டை சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதன் காரணமாகா நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து சுப்மன் கில் காயம் காரணமாக விலக, அந்த இடத்தில் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார். நம்பர் 4 வரிசையில் களமிறங்கிய அவர் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மொத்த இந்திய அணியும் இணைந்து வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் சேர்த்தால், இந்திய அணி 356 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ரசிகர்கள் பலரும் மழை வந்தால் மட்டுமே இந்திய அணி தப்பிக்க முடியும், டிரா செய்ய முடியும் என்று கருதினர். ஆனால் இந்திய அணி அட்டாக் செய்ய தொடங்கியது பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தது.
இளம் வீரர் சர்ஃபராஸ் கான் களமிறங்கிய நொடி முதலே அட்டாக் செய்து கொண்டே இருந்தார். பவுண்டரி, சிக்சர் என்று பொளந்து கட்டிய அவர், 4வது நாள் ஆட்டத்தின் முதல் செஷனிலேயே சதம் விளாசி சம்பவம் செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கான் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதனால் சர்ஃபராஸ் கானுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கிரிக்கெட் கடவுளான சச்சின் டெண்டுல்கர் சர்ஃபராஸ் கானை பாராட்டியுள்ளார். அதில், வாழ்க்கையின் வேர்களை அடைய கிரிக்கெட்டும் ஒரு வழியாகும். பெங்களூர் மண்ணிற்கும் ரச்சின் ரவீந்திராவுக்கும் ஸ்பெஷலான தொடர்பு உள்ளது. நியூசிலாந்து அணிக்காக விளையாடினாலும், அவரின் குடும்பம் பெங்களூரை சேர்ந்தவர்கள்.. இன்று அதே மைதானத்தில் சதம் அடித்துள்ளார்.
அதேபோல் சர்ஃபராஸ் கான்.. என்ன மாதிரியான சூழலில் நீங்கள் உங்களின் முதல் சதத்தை விளாசி இருக்கிறீர்கள் தெரியுமா.. இந்திய அணிக்கு இதற்காக தான் காத்திருந்தது.. அதிகமாக தேவையானதாகவும் இருந்தது.. இரு திறமையான பேட்ஸ்மேன்களுக்கும் சுவாரஸ்யமான காலம் காத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
