மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட 4 ஸ்பின்னர்கள் இருக்கும் போது, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக நம்பர் 3 வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 269 பந்துகளில் ஒரு சிக்ஸ், 19 பவுண்டரி உட்பட 152 ரன்களை விளாசி அசத்தினார். அதேபோல் முதல் இன்னிங்ஸில் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
தற்போது ரஞ்சி டிராபியில் பேட்டிங்கில் ஃபார்மை நிரூபித்துள்ள நிலையில், இந்திய அணி டெஸ்ட் அணியில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இருந்தாலும் இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் என்று 4 ஸ்பின்னர்கள் இருக்கும் நிலையில், 5வது ஸ்பின்னரின் தேவை இருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஏற்கனவே பெங்களூர் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் அஸ்வினுக்கு பவுலிங் செய்யவே ரோஹித் சர்மா வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்க கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேபோல் கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணிக்காக கடைசி டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி இருந்தார். பேட்டிங், பவுலிங்கில் அசத்தியதால், வாஷிங்டன் சுந்தரை தயார் செய்யும் வகையில் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்களிடையே வாஷிங்டன் சுந்தரின் தேர்வு சரியா என்ற விவாதம் தொடங்கியுள்ளது.