பெங்களூர் : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்குகிறது. ஆனால் பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் டாஸ் வீசப்படவில்லை. மைதானம் தார் பாயால் மூடப்பட்டிருக்கிறது. பெங்களூருவில் மைதானத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் வசதி சிறப்பாக இருக்கிறது.
இதனால் மழை நின்ற பிறகு போட்டி அரை மணி நேரத்தில் தொடங்கி விடும். இந்த சூழலில் இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும். பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை தற்போது பார்க்கலாம்.

பெங்களூருவில் தற்போது குளிர்ந்த கால சூழல் இருக்கிறது. வானம் மேகம் மூட்டத்துடன் இருப்பதால் ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். முதல் சில ஓவர்கள் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். ஆனால் மைதானம் ஈரப்பதமாக இருக்கும் என்பதால் சுழற் பந்துவீச்சாளர்கள் பந்தை பிடித்து வீசுவது என்பது சிரமமான காரியமாக இருக்கும்.
மேலும் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு எடுபடாது. இதனால் இந்திய அணி இரண்டு சுழற்ப்பந்துவீச்சாளரை வைத்து விளையாடலாமா இல்லை மூன்று அல்லது நான்கு வேக பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறது. வானிலை இதே மாதிரி ஐந்து நாட்களும் தொடர்ந்தால் இந்திய அணி ஒரு ஸ்பின்னரை வைத்து விளையாடினாலே போதுமானது.
ஆனால் வானிலை மேம்படும் என்ற நிலை இருந்தால் நிச்சயம் இந்தியா இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து களம் இறங்க வேண்டும். இதேபோன்று டாஸ் வென்றால் இந்திய அணி முதலில் பந்துவீச்சு செய்வது சரியான முடிவாக இருக்கும்.
ஒருவேளை பேட்டிங் செய்யும் நிலை வந்தால் இந்திய வீரர்கள் கால சூழலுக்கு ஏற்ப வகையில் விக்கெட்டுகளை இழக்காமல் முதலில் குறைந்தபட்சம் 250 ரன்களுக்கு மேலாவது எடுக்க வேண்டும்.இதனால் இந்த ஆட்டத்தில் டாஸ் மிகவும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் மழை காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது.