புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருப்பது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடைசியாக சதம் விளாசி 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நடப்பாண்டில் அவரின் பேட்டிங் சராசரி 21.95ஆக மட்டுமே இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வி இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களிடமும், புனே மைதானத்தில் சுழற்பந்துவீச்சாளர்களிடமும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறி இருக்கின்றனர். இதனால் நிச்சயம் சீனியர் வீரர்களிடம் நேரடியாக கேள்விகள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நட்சத்திர வீரர் விராட் கோலியின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 இன்னிங்ஸ்களில் மட்டும் விராட் கோலி 6, 17, 47, 29, 0, 70, 1 மற்றும் 17 என்று மொத்தமாக 187 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதிலும் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதன் காரணமாக நடப்பாண்டில் மட்டும் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 21.95ஆக குறைந்துள்ளது. 2008ஆம் ஆண்டில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 31.80ஆக இருந்தது. அதுதான் அவரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் ஓராண்டில் இருந்த குறைந்த பேட்டிங் சராசரியாகும். ஆனால் தற்போது விராட் கோலி புதிய பாதாளத்திற்கு சென்றிருக்கிறார்.
அதேபோல் விராட் கோலி கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு சதம் விளாசி இருந்தார். அதன்பின் சுமார் 15 மாதங்கள் கடந்த போதும் விராட் கோலி இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக விராட் கோலி ஆடிய 27 இன்னிங்ஸ்களில் 22 முறை ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இந்திய மண்ணிலேயே ஸ்பின்னர்களிடம் விராட் கோலி மோசமான ஆட்டமிழப்பது அவரின் டிஃபென்ஸ் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தனது டெக்னிக்கை மீண்டும் ஒருமுறை சோதனை செய்ய வேண்டிய அவசியம் என்று பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் ஓய்வை அறிவித்து வெளியேறலாம் என்றும் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.