புனே: இந்திய அணியின் சீனியர் வீரர்களாக உள்ள கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் பங்கேற்று ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் ஃபார்ம் அவுட்டாகும் போது, ரஞ்சியில் விளையாட அறிவுறுத்தப்பட்டதை போல் சீனியர் வீரர்களையும் விளையாட அறிவுறுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளது.
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் வந்த பின், நட்சத்திர வீரர்களாக இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் இந்திய அணிக்கு ஆடாத போது, உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவே நேரடியாக தெரிவித்தார். இதன் காரணமாகவே கேஎல் ராகுல், சுப்மன் கில், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் துலீப் டிராபியில் விளையாடினர்.

ஆனால் தற்போது இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மோசமான ஃபார்மில் உள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா கடந்த 8 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அதேபோல் விராட் கோலி கடந்த 8 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு அரைசதம் தான் அடித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் ஸ்விங் பந்துகள் மற்றும் சுழற்பந்துகள் இரண்டை எதிர்கொள்வதிலும் சிக்கல் உள்ளது. விராட் கோலி கடைசியாக விளையாடி 27 இன்னிங்ஸ்களில் 22 முறை ஸ்பின்னர்களிடம் தான் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக இருவரையும் ஒரு சில ரஞ்சி போட்டிகளில் விளையாட அறிவுறுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
அதேபோல் விராட் கோலி கடைசியாக 2010ஆம் ஆண்டு இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காகவும், ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா 2016ஆம் ஆண்டு துலீப் டிராபியில் விளையாடி இருக்கிறார். இதுதான் இவர்கள்இருவரும் கடைசியாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது.
ஆனால் கேஎல் ராகுல், அஸ்வின் உள்ளிட்டோர் 2020 ரஞ்சி டிராபி தொடரிலும், ரவீந்திர ஜடேஜா 2023 ரஞ்சி டிராபி தொடரிலும் விளையாடி இருக்கின்றனர். அண்மையில் கூட துலீப் டிராபியில் கேஎல் ராகுல், சுப்மன் கில், ரிஷப் பண்ட், சர்ஃபராஸ் கான், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் விளையாடி இருக்கின்றனர். கடைசி நிமிடத்தில் தான் ஜடேஜா விலகினார்.
இதனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒரேயொரு ரஞ்சி டிராபி போட்டியிலாவது விளையாடி தங்களது ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதனை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரும் அறிவுறுத்த வேண்டும் என்று ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.