துபாய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரராக சுப்மன் கில்லுடன் களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதால், அவர் அந்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், துவக்க வீரராக ரோஹித் சர்மாவுக்கு இணையாக அதிரடியாக ஆடக்கூடிய ஒரு வீரரை ஆட வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், அணியில் அப்படி எந்த ஒரு மாற்று வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இருக்கும் அணியில் பேட்டிங் வரிசையில் பெரிய அளவில் மாற்றம் செய்யாமல் மாற்று துவக்க வீரரை தேர்வு செய்ய வேண்டும் எனில், கே.எல். ராகுலைத்தான் துவக்க வீரராக விளையாட வைக்க வேண்டும். அவர் முன்பு இந்திய ஒருநாள் அணியில் துவக்க வீரராக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் சம்பந்தமே இல்லாமல் இந்திய ஒருநாள் அணியில் ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார். எனவே, அவருக்கு துவக்க வீரராக வாய்ப்பு அளிப்பது சரியான முடிவாகவே இருக்கும். ஆனால், இதில் ஒரு சிக்கல் உள்ளது. கே.எல். ராகுல் ரோஹித் சர்மாவைப் போல அதிரடியாக ஆடக்கூடியவர் அல்ல.
சுப்மன் கில் எப்படி நிதானமாக விளையாடுவாரோ அதே பாணியைத்தான் கே.எல். ராகுலும் நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறார். எனவே, சுப்மன் கில் - கே.எல். ராகுலை துவக்க வீரர்களாக களமிறக்கினால் இந்திய அணி அதிரடி துவக்கத்தைப் பெறுமா? என்பது சந்தேகமே.
எனினும், இப்போது உள்ள சூழ்நிலையில் கே.எல்.ராகுல் மட்டுமே இந்த இடத்துக்கு பொருத்தமானவராக இருப்பார். ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டு அவர் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மாற்று துவக்க வீரராக இடம் பிடித்திருந்தார். ஆனால், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட அணியில் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஐந்தாவது சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டார்.
இதுதான் இப்போது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஸ்வாலை அணியில் மாற்று வீரராக வைத்திருந்தால், இப்போது ரோஹித் சர்மா இடத்தில் அவரை களம் இறக்கி இருக்கலாம். அந்த வகையில், இந்திய அணி தேர்வில் தவறு நடந்து இருக்கிறது.