மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர், முன்னாள் பயிற்சியாளரான கிரேல் சேப்பல் வெர்ஷன் 2.0 என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. 12 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்று வந்த இந்திய அணியை, பயிற்சியாளராக பொறுப்பேற்ற 3 மாதங்களில் சோலியை முடித்துள்ளார்.
இந்திய அணியின் இருண்ட காலம் என்று கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலத்தை சச்சின் டெண்டுல்கர் கூறுவார். ஏனென்றால் 2007 உலகக்கோப்பை தோல்வி, அதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்விகளால் கிரேக் சேப்பல் மீது விமர்சனங்கள் வைக்கப்படும். ஆனால் இன்னொரு பக்கம் சீனியர் வீரர்களை ஓரம்கட்டிவிட்டு அதிகளவிலான இளம் வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டு வந்தவர் கிரேக் சேப்பல் தான்.

எப்படி இருந்தாலும் கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலம், இந்திய அணிக்கும், வீரர்களுக்கும் மோசமான அனுபவமாக இருந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற 3 மாதங்களில், அவரை இன்னொரு கிரேக் சேப்பல் என்று ரசிகர்கள் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.
ஏனென்றால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று உச்சத்தில் இருந்தது. ஆனால் தற்போது சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷாகி மோசமான தோல்வியை நியூசிலாந்து அணிக்கு எதிராக பெற்றிருக்கிறது.
அதேபோல் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தொடர்ச்சியாக தவறுகளை செய்து வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் என்று கேப்டன் ரோஹித் சர்மா தனியாக முடிவு எடுக்க முடியாது. அதற்கு கவுதம் கம்பீரும் சேர்ந்தே பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் ஒரு இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகும் போது, மீண்டும் அதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும் சில நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் அடுத்த 5 இன்னிங்ஸிலும் அதேபோன்ற பேட்டிங் சொதப்பல்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இதனை ஒருமுறை கூட கம்பீர் அடையாளப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் 2 மற்றும் 3 ஆகிய டெஸ்ட் போட்டிகளில் 2 வேகப்பந்துவீச்சாளருடன் இந்திய அணி விளையாடியது.
அந்த 2 போட்டிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் இந்திய அணி களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால் கம்பீர் அப்படியான யோசனையை ஆலோசித்து மாற்றங்களை கொண்டு வரவில்லை. மேலும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களிடம் திணறுவதை அறிந்தும், அதற்கேற்றபடி பயிற்சி முறைகளையும் மாற்றவில்லை.
இன்னொரு பக்கம் ஜூனியர் வீரர்களை ரஞ்சி டிராபி, துலீப் டிராபி விளையாட அறிவுறுத்தும் கவுதம் கம்பீர், சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, சிராஜ் உள்ளிட்டோரை கொஞ்சம் கூட கண்டுகொள்வதே இல்லை. இதனால் இந்திய அணியில் சீனியர், ஜூனியர் வீரர்களுக்கு இடையில் வேறுபாடுகளை கம்பீர் உருவாக்கிவிட்டதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.