கவுஹாத்தி: நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் 20 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா மிரள வைக்கும் ஆட்டத்தை ஆடினார். இதனால் அவருக்குத் தான் ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அந்த விருது வழங்கப்பட்டது ரசிகர்களுக்குச் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மா, வெறும் 14 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். 20 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

பொதுவாக இவ்வளவு அதிரடியாக ஆடிய பேட்ஸ்மேனுக்கே விருது வழங்கப்படும். ஆனால், கவுஹாத்தி ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருந்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 14 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். இப்படிப்பட்ட ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.
இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவித்த அதே ஆடுகளத்தில், நியூசிலாந்து அணியைக் கட்டுப்படுத்தியதில் ஜஸ்பிரித் பும்ராவின் பங்கு முக்கியமானது. அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதிலாக அணிக்குள் வந்த பும்ரா, தனது 4 ஓவர்களில் வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரன் குவிப்புக்குச் சாதகமான ஆடுகளத்தில் ஓவருக்கு 4.2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கக் காரணமாக அமைந்தது.
பும்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஆபத்தான வீரரான டிம் சீஃபர்ட்டை போல்ட் ஆக்கினார். 18வது ஓவரில் கைல் ஜேமிசனின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னரை வெளியேற்றினார்.
மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தத் திணறிய போது, பும்ரா மட்டும் தனித்துத் தெரிந்தார். இதனால் பேட்ஸ்மேன்களை விடப் பும்ராவின் பந்துவீச்சுக்கே முக்கியத்துவம் அளித்து ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், துவக்க வீரர் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டி20 போட்டிகளில் அவர் டக் அவுட் ஆகி ஆட்டமிழப்பது இது 7வது முறையாகும். இந்திய அளவில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா (12 முறை) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாகச் சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளார். இந்தியத் தரப்பில் மற்ற பந்துவீச்சாளர்களான ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.