பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு புதிய சாதனை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் 283 ரன்களை விளாசினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 1,500 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்கவுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி உள்ளது. சொந்த மண்ணில் நடப்பதால், இந்திய அணி தொடக்க வீரர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

வங்கதேச டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அசத்தலாக செயல்பட்டார். இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் மொத்தமாக 3 சதங்கள், 7 அரைசதம் உட்பட 1,217 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் இந்திய அணி வீரர்களில் யாரும் 1,500 ரன்கள் என்ற சாதனையை படைத்ததில்லை. அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 1,159 ரன்களை விளாசி இருந்தார்.
அந்த சாதனையையும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் முறியடித்தார். தற்போது 1,500 ரன்களை விளாசுவதற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 283 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. பெங்களூர், புனே மற்றும் மும்பை என்று பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் நடப்பதால், ஜெய்ஸ்வாலால் எளிதாக இந்த சாதனையை படைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் இதுவரை ஜோ ரூட், மார்னஸ் லபுஷேன், உஸ்மான் கவாஜா மற்றும் பாபர் அசாம் ஆகிய 4 பேரும் 1,500 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளனர். ஜோ ரூட் தொடர்ச்சியாக 3வது முறையாக 1,500 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். இதனால் இந்திய வீரரும் இந்த சாதனையை படைக்க வேண்டும் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.