இஸ்லாமாபாத்: 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குறித்த நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பு ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அந்நாட்டு அரசும் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என நடத்திய நாடகம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
முதலில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று கூறிய பாகிஸ்தான், தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டு விளையாட சம்மதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கையை அந்நாட்டின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கடுமையாகச் சாடியுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஆனால், இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்திருந்தது. பல வாரங்களாக நீடித்த இந்த நாடகத்திற்குப் பிறகு, தற்போது பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் திடீர் மனமாற்றம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள டேனிஷ் கனேரியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கனேரியா பேசுகையில், "எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. இந்த நாடகம் இத்துடன் நிற்காது, அவர்கள் கண்டிப்பாக தங்கள் முடிவை மாற்றிக்கொள்வார்கள் என்று நான் முன்பே கூறியிருந்தேன். ஏனெனில் அவர்கள் பல்டி அடிப்பதில் வல்லவர்கள். இவர்களைப் போல முடிவை மாற்றுபவர்களை நான் பார்த்ததே இல்லை. ஒரு நேரத்தில் ஒன்று சொல்வார்கள், அடுத்த நொடியே முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் சொல்வார்கள். பாகிஸ்தானின் இந்தச் செயலைப் பார்த்து உலகமே சிரிக்கிறது" என்று விமர்சனம் செய்துள்ளார்.
வங்கதேசம் விவகாரத்தை ஐசிசி உடனே கையாண்டது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வங்கதேசம் எப்போது உதவியது என்று எனக்குத் தெரியவில்லை. புறக்கணிப்போம் என்று பெரிய அறிவிப்புகளை வெளியிட்டீர்கள், ஆனால் இப்போது என்ன ஆயிற்று? திடீரென்று உங்களை விளையாட வைக்கும் அளவுக்கு என்ன மாற்றம் நடந்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுடன் விளையாட மறுத்தால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து ஐசிசி கடுமையான எச்சரிக்கையை விடுத்ததே பாகிஸ்தானின் இந்த பணிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஐசிசி உடனான கூட்டத்தில் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர்கள் குறித்தும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் அழுத்தம் அதிகரித்த நிலையில், பாகிஸ்தான் அணியை தடை செய்ய நேரிடும் என்றும், பெரும் நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் ஐசிசி எச்சரித்தது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்களுக்குத் தடையில்லாச் சான்று வழங்கப்படாது என்றும் ஐசிசி கூறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே நிலைமை மோசமாவதை உணர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்வாங்கியுள்ளது.
இதுகுறித்து மேலும் பேசிய கனேரியா, "திடீரென்று போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு முடிவை எடுத்தால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். திடீரென்று முடிவை மாற்றிக்கொண்டு, நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று ஊடகங்களில் பரபரப்பைக் கிளப்புவது நிலைமையை மேலும் மோசமாக்கும். இந்த விவகாரம் தற்போது எதிர்காலத்தில் பெரிய தலைவலியாக மாறும் அளவுக்குச் சென்றுள்ளது. இப்போது நடப்பதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
"24 மணி நேரமும் ஊடகங்களில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்துவிட்டு, பிறகு பின்வாங்குவது தேவையற்றது. ஐசிசிக்கு எதிராக நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒன்றும் செய்யவில்லை. இது எதிர்காலத்தில் உங்களுக்குத் தலைவலியாகவே முடியும்" என்று கனேரியா எச்சரித்துள்ளார்.
ஐசிசி தொடர்களைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிதான் அதிக வருவாயை ஈட்டித் தரும் போட்டியாகும். கடந்த ஐந்து முறை இந்தியாவுடன் மோதிய அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியையே தழுவியுள்ளது.
தற்போதைய தொடரில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நல்ல நிலையில் உள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான மோசமான சாதனையை இம்முறை மாற்றத் துடிக்கிறது. பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடக்கும் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.